உடையும் திமுக கூட்டணி? 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில்... விசிக பங்கேற்கவில்லை
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில், விசிக தரப்பில் யாரும் பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 2 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட உள்ளவர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் மார்ச் 12ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
வேட்பு மனு தாக்கல் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளதால், அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர்களை முடிவு செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளன.
திமுக கூட்டணி
அதிமுகவுக்கு எதிராக திமுக மிகப் பெரிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. தற்போது வரை மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை திமுக இறுதி செய்துள்ளது. காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முதல்கட்ட பேச்சுவார்த்தை
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் திமுக உடனான முதல்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தினார். அப்போது கூட்டணி பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாகவும் விரைவில் கூட்டணி முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
பங்கேற்கவில்லை
இந்நிலையில், விசிக-திமுக உடனான இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறவிருந்தது. இதில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு விசிக தரப்பிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை.
காரணம் என்ன
விடுதிலை சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்பதாகவும் இருப்பினும், திமுக அதற்கு ஒப்புக்கொள்ளாததால் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, விசிக தரப்பில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன், தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.