பெரியப்பாவுக்கு "பாடிகார்டா" வருவேன்னு சொன்னாயே.. மறைந்து போன யாழினி.. கண்ணீர் விட்ட திருமா!
உயிரிழந்த பிரமுகர் மகளுக்கு திருமாவளவன் கண்ணீர் மடல் எழுதியுள்ளார்
சென்னை: "பெரியப்பாவின் மடியில் அமர்ந்து படமெடுக்க வேண்டும்" என்று சொல்லிக்கொண்டு துள்ளியோடி வந்த யாழினிக்கு இப்படியொரு சாவா? அந்தப் பிஞ்சுமழலையின் சாவு நெஞ்சை பிழிகிறது. "பெரியபெண்ணாக வளர்ந்து நான் பெரியப்பாவுக்குப் 'பாடிகார்டாக' பாதுகாப்புக்குச் செல்வேன்" என்று சொன்னாயே யாழினி" என்று விசிக பிரமுகர் வீட்டு குழந்தை யாழினியின் மரணம் குறித்து திருமாவளவன் கண்ணீர் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகேயுள்ள எருக்கலைநத்தம் கிராமத்தை சார்ந்தவர் தம்பி கண்ணன் என்கிற கார்வண்ணன்.. இவரது மனைவி எழிலரசி.. இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விசிக வேட்பாளராக தென்னை மரச்சின்னத்தில் போட்டியிட்டு மதுரை மேற்கு ஒன்றியக்குழு உறுப்பினராக வெற்றிப்பெற்றார். இது அவரது 2-வது வெற்றியாகும்.
இந்த வெற்றியை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம் தெரிவிக்க விரும்பினர்.. திருமாவளவன் மதுரையில் இருப்பது தெரிந்ததும், இவர்களது குழந்தை யாழினியையும் அழைத்து கொண்டு அங்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர்.. அப்போது விபத்தில் படுகாயமடைந்த குழந்தை தீவிர சிகிச்சை அளித்தும் பரிதாபமாக உயிரிழந்தாள்.
ரஞ்சனிக்கு ஆண் தொடர்புகள் அதிகம்.. மயக்கியே பணத்தை கறப்பார்.. ஸ்ரீகந்தன் மனைவி நான்சி பதிலடி!
திருமாவளவன்
யாழினி ஆஸ்பத்திரியில் இருந்த சமயம், திருமாவளவன் நேரடியாக சென்று பார்த்தார்.. கண்கலங்கி நின்றார்.. இப்போது யாழினியின் மறைவு திருமாவளவனை ரொம்பவே உலுக்கிவிட்டது. இது சம்பந்தமான தனது ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் திருமாவளவனின் சோகத்தை பிழிந்து காட்டுகிறது.. அடக்க முடியாத வேதனையை வார்த்தையால் முடிந்தவரை கொட்டி உள்ளார் திருமா... அந்த பதிவுதான் இது!
விபத்து
"ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோர் வெற்றி பெற்ற உறுப்பினர்களை எங்கோ ஓரிடத்திற்கு அழைத்துச்சென்றுள்ள நிலையில், அவ்வாறு எங்கும் செல்லாமல், நேற்று மதுரைக்கு சென்ற என்னைச் சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காக வந்தவழியில், சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் காத்திருக்கும்போதுதான் வேதனைமிக்க அந்த விபத்து நேர்ந்துள்ளது.
நாடித்துடிப்பு
மண்டையோட்டில் வெளிக்காயம் இல்லை. ஆனால், உள்ளே மூளையில் கடுமையான சேதம். உடனே அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்ற இயலாத அளவுக்கு நாடித்துடிப்பு வெகுவாகக் குறைந்து சுயநினைவற்ற நிலைக்குப்போய்விட்டது. பத்து நிமிடங்களில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குக் கொண்டுவந்து தந்தையும் குழந்தையும் தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கே சென்று பார்த்தேன். கார்வண்ணனின் இடுப்பெலும்பில் பலத்த அடி. இலேசான கீறல் உடைவு. எனினும் உயிருக்கு ஆபத்தில்லை என்பது சற்று ஆறுதல்.
ஆக்ஸிஜன் கருவி
மழலை யாழினியைக் காப்பாற்ற வாய்ப்பில்லையென மருத்துவர்கள் கையைவிரித்து விட்டனர். யாழினியின் கண்களில் ஒளியில்லை. உடலில் கொஞ்சமும் அசைவில்லை. தொட்டுப்பார்த்ததில் துளியும் வெப்பமில்லை. ஆக்சிஜன் கருவிமூலம் செயற்கை சுவாசம் இருந்தது. எனினும் மேலும் முயற்சிக்கவும் என்று மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டேன்.மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலும் பின்னர் இராஜாஜி மருத்துவமனையிலும் குழந்தையைக் காப்பாற்றுவதற்குப் போராடியும் இயலாமல் போய்விட்டது.
பாடிகார்டு
"பெரியப்பாவின் மடியிலமர்ந்து படமெடுக்க வேண்டும்" என்று சொல்லிக்கொண்டு பேராவலுடன் பெற்றோருடன் துள்ளியோடிவந்த குழந்தை யாழினிக்கு இப்படியொரு சாவா?அந்தப் பிஞ்சுமழலையின் சாவு நெஞ்சைப் பிழிகிறது. "பெரியபெண்ணாக வளர்ந்து நான் பெரியப்பாவுக்குப் ‘பாடிகார்டாக' பாதுகாப்புக்குச் செல்வேன்" என்று யாழினி சொன்னதாக, யாழினியின் தமக்கை கவினி கூறியபோது என் கண்கள் கலங்கின. கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. சிந்தும் கண்ணீர்ப்பூக்களால் அன்புமழலை யாழினிக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.- தொல்.திருமாவளவன்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.