"பயங்கரம்".. அதென்ன 2ம் தேதி.. அதுவும் தெருத்தெருவா.. ஆர்எஸ்எஸ்ஸை பாத்தீங்களா.. எகிறும் திருமாவளவன்
ஆர்எஸ்எஸ் பேரணி குறித்து திருமாவளவன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்
சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த, அக்டோபர் 2 தேதியை தேர்ந்தெடுத்துள்ளதால், இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று திருமாவளவன் சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளதாகவும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் கூறியிருந்தார்.
திருமாவின் இந்த குற்றச்சாட்டு, பாஜகவை கொந்தளிக்க வைத்துள்ளது.. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்..
அப்போது, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதற்காக தடை கோருகிறீர்கள்.. பேரணி நடத்துவது அனைவருக்குமான உரிமைதானே? அதுபோல ஆர்எஸ்எஸ் முறைப்படி அனுமதி பெற்று பேரணி நடத்தினால் தவறா? என்ற கேள்விகளை முன்வைத்தோம்.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை கிடையாது! உச்ச நீதிமன்றம் செல்லுங்கள்.. திருமாவளவன் வழக்கில் திட்டவட்டம்!
குதர்க்கம்
அதற்கு திருமாவளவன் அளித்த பதில்தான் இவை: "சுதந்திர தினத்தை இவங்க கொண்டாட வேண்டும் என்றால், ஆகஸ்ட் 15 அன்றுதானே கொண்டாடியிருக்க வேண்டும்.. அதைவிட்டுவிட்டு, ஆகஸ்ட் 2-ம் தேதி என்று தீர்மானிக்ககூடாது.. காந்தியை சுட்டுக்கொன்ற இயக்கம் ஆர்எஸ்எஸ் என்று இன்றைக்கும் நாம் படிக்கிறோம்.. அதற்கான ஆதாரங்களும் நிறையவே இருக்கு.. ஆனால் காந்தியடிகள் பிறந்தநாளை இவர்கள் தேர்வு செய்கிறார்கள் என்றால் இதெல்லாம் குதர்க்கமான முடிவுகள்.. வேண்டுமென்றே செய்கிறார்கள்.. வேறு தேதியை தேர்வு செய்யாமல், எதுக்காக அக்டோபர் 2-ஐ தேர்வு செய்ய வேண்டும்?
50 தெருக்கள்
இந்த பேரணியை பாஜக நடத்திவிட்டு போகலாமே? ஏன் ஆர்எஸ்எஸ் நடத்த வேண்டும்? எதுக்காக 50 இடங்கள்? அதுவும் வீதிவீதியாய் பேரணி எதுக்கு? வழக்கமாக காவல்துறை அனுமதி தரும் இடங்களில்தானே பேரணி நடத்த வேண்டும்? இந்த வீதியில் பேரணியை தொடங்கி, இந்த வழியாக சென்று, அந்த வீதியில் முடிக்க போகிறோம் என்று இவர்களே ஏன் சொல்கிறார்கள்? மக்கள் வசிக்கக்கூடிய தெருக்களுக்குள் பேரணியை நடத்துவதாக 50 இடங்களை தேர்வு செய்வது ஏன்? இதெல்லாம் குதர்க்கமாக, வேண்டுமென்றே, திட்டமிட்டே செய்கிறார்கள்..
ஆர்எஸ்எஸ் பேரணி
ஒரு சமூக பதற்றத்தை ஏற்படுத்தவதற்கான முயற்சி இது.. ஆர்எஸ்எஸ் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய செயல்திட்டத்தை அறிவித்துள்ளது.. நாங்கள் சமூக நல்லிணக்கத்திற்கான மனித சங்கிலியை அறிவித்துள்ளோம்.. எங்களால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.. நாங்கள் ஆர்எஸ்எஸ் பேரணியை தடுக்கவில்லை, மாறாக, அவர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்துகிறோம்.. அக்டோபர் 2 தேதியை தேர்ந்தெடுத்துள்ளதால், இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று கோர்ட்டில் சொல்கிறோம். இவர்கள் பேரணி நடத்துவதற்கு உரிமை இருக்கிறது என்றால், இவர்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், ஆபத்து உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டவும் எங்களுக்கு ஜனநாயக உரிமை உள்ளது, சமூக பொறுப்பும் உள்ளது..
இந்துக்கள்
மற்றபடி ஒரு இயக்கத்துக்கு எதிரானதாக இந்த பேரணியை பார்க்கவில்லை. பாஜக பேசும் அரசியல் பயங்கர ஆபத்தானது.. அதை மக்களிடம் நாம் சொல்ல வேண்டி உள்ளது.. சாதாரண இந்துக்களை, சங்பரிவார் இந்துக்கள் ஆக்கிரமிக்க பார்க்கிறார்கள்.. சங்பரிவார் இந்துக்களைதான் நாங்கள் அம்பலப்படுத்துகிறோம்.. நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை.. நாங்கள் இந்துக்களுக்காக போராடுகிறோம்.. பாஜக இங்கே வளரவில்லை.. ஆனால், வளர்வதற்காக முயற்சிக்கிறார்கள்.. அதற்கு தமிழர்கள் இடம்தரக்கூடாது" என்றார் திருமாவளவன்.