இந்தி திணிப்பு முயற்சி.. தமிழகத்தை ஆக்கிரமிப்பதற்கான அரசியல் சதி.. திருமாவளவன் கண்டனம்
Recommended Video
சென்னை: இந்தி திணிப்பில் வென்றால் தமிழகத்தில் சனாதன சக்திகள் வேரூன்றி வலுப்பெறும் என்றும் தமிழகத்தை ஆக்கிரமிப்பதற்கான அரசியல் சதி என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரையின்படி எட்டாம் வகுப்பு வரையில் இந்தி கட்டாயமாக்கப்படும் என்கிற வரைவ அறிக்கையை மைய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை என்னும் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனை ஒட்டுமொத்த தமிழகமும் மிகக் கடுமையாக எதிர்த்து குரலெழுப்பியதும் மைய அமைச்சர்கள் அதனை மறுத்துள்ளனர்.
அது அரசின் கொள்கை முடிவல்ல என்றும் மக்கள் கருத்தை அறிந்தபின்னர் தான் அதன் மீது உரிய முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இத்துடன் தமிழக மக்கள் தவறாகப் புரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் கருத்துக் கூறியுள்னர். தமிழக மக்களின் எதிர்ப்புகளை சமாளிப்பதற்காகவே அவர்கள் இதுபோன்ற உண்மைக்கு மாறான விடைகளை அளித்துள்ளனர்.
பெரியார் தலைமையில்
ஆனால் உண்மையில் அவர்களின் நோக்கம் இந்தி பேசாத அனைத்து மாநிலங்களிலும் இந்தியை பரப்புவதே ஆகும். குறிப்பாக தமிழகத்தில் இந்தியை திணித்தே தீர வேண்டுமென்பதில் புதுதில்லி ஆட்சியாளர்கள் குறியாக உள்ளனர். இந்தத் திணிப்பு முயற்சி 1938ம் ஆண்டில் இருந்தே தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்போது தந்தை பெரியார் தலைமையில் இந்தி திணிப்புக்கு எதிராக முதல் மொழிப்போர் வெடித்தது. அந்த போராட்டத்தில் அன்னை தமிழைக் காத்திட நடராசன்,தாளமுத்து ஆகியோர் அரசப் பயங்கராவத ஒடுக்குமுறைக்கு பலியாகினர். அதன்பின்னரே அந்த முயற்சியைக் கைவிட்டனர். எனினும் அது தற்காலிகமான நடவடிக்கையாகவே அமைந்தது. பின்னர் தொடர்ந்து மறைமுகமாகப் பல வழிகளில் இந்தி திணிப்பைச் செய்தவாறே இருந்தனர்.
8தமிழர்கள் சாவு
ஆதலால 1965இல் மீண்டும் இந்தி திணிப்பை எதிர்த்து இரண்டாம் மொழிப்போர் வெடித்தது. அப்போர்களத்தில் 8 தமிழர்கள் தமது இன்னுயிரை நீத்தனர். அன்னைத் தமிழைக் காத்தனர். அதன்பின்னர் இந்திய அரசு அம்முயற்சியைக் கைவிட்டது. ஆனாலும் மைய அரசின் பாடத்திட்டத்தின்படி இயங்கும் கல்வி நிறுவனங்கன் ஊடாகத் தொடர்ந்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணித்து வந்தது இந்திய அரசு.
2004ம் ஆண்டு
எனவே அதனை எதிர்த்து 2004 இல் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மூன்றாவது மொழிப்போர் நடைபெற்றது. தமிழகத்தின் நான்கு திசைகளிலிருந்தும் தமிழ்ப்பாதுகாப்பு ஊர்த்திப்பயணம் மேற்கொள்ளப்பட்டு நிறைவாக திருச்சியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இவ்வாறு தொடர்ச்சியாக இந்திய அரசு திட்டமிட்டு இந்தி திணிப்பு செய்துவரும் நிலையில், அதன் நீட்சியாகவே இப்போது எட்டாம் வகுப்பு வரை கட்டாய இந்தி என்னும் அறிவிப்பாகும. இது வெறும் வரைவு அறிக்கை என்கிற வகையில் உள்நோக்கமில்ல அறிவிப்பு என அணுகக்கூடியதல்ல. தமிழகத்தில் என்ன எதிர்விணை நிகழும் என்பதை சோதிப்பதற்காகவே இப்போது திடுமென அறிவித்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பாஜகவின் முதன்மை நோக்கம்
ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்று உரத்து முழங்கும் பாஜகவின் முதன்மையான நோக்கம் கலாச்சார ரீதியாக இந்தியாவை இந்தி மொழியின் ஆதிக்கமும் இந்து மதத்தின் ஆதிக்கமும் நிலைநாட்டப் பெற்ற ஒரு தேசமாக மாற்றப்பட வேண்டுமென்பதுதான். மதமும் மொழியும் கலாச்சரத்தை கட்டமைக்கும் கருவியாக உள்ளன.என்பதால் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை இந்தி அல்லாத பிறமொழி பேசும் இந்தியர்கள் மீது திணிப்பதில் மிகவும் குறியாக உள்ளனர்.
பன்முகத்துவத்தை சிதைக்க
இம்முயற்சியானது முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்திமொழி மற்றும இந்துமத ஆதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஃபாசிச சக்திகளின் மக்கள் விரோதப் போக்காகும். எனவே இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு என்பது வெறும் மொழி சார்ந்த சிக்கலாக மட்டுமே கருத இயலாது. இது பலமொழி, பல மதம், பல கலாச்சாரம் என்கிற பன்முகத்துவத்தை சிதைக்கிற, பிற தேசிய இனங்களின் சமூக, பண்பாடு, அரசியல் உள்ளிட்ட அனைத்து அடையாளங்களையும் அழித்தொழிக்கிற சதி முயற்சியே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இது தொடர்பான நமது எதிர்ப்பும் கண்டனமும் இச்சக்தியை முறியடிப்பதற்கான போராட்டமேயாகும்.
தமிழத்தில் வேரூன்ற
இத்தனை ஆண்டுகளாக நாம் நடத்திய மொழிப்போராட்டத்தின் விளைவாகவே இந்தி,சமஸ்கிருத இந்துத்துவ ஆதிக்க சனாதன சக்திகளால் அரசியல் ரீதியாகவும் தமிழகத்தை ஆக்கிரமிக்க இயலவில்லை. அதவாது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்களால் வெற்றி பெற இயலவில்லை. இந்தியை திணிப்பதில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் வட இந்திய மாநிலங்களைப்போலவே தமிழகத்திலும் சனாதன சக்திகள் வேரூன்றி வலுப்பெற்று அரசியலும் ஆதிக்கம் செலுத்தும்நிலை உருவாகும்.
நம்மை சீரழிக்கும் முயற்சி
தமிழ்த்தேசிய இனம் என்கிற தனித்துவஅடையாளம் ஆளுமையை இழந்து சிதையும் நிலைக்கு ஆளாக நேரும். எனவே அது வரைவு அறிக்கையே ஆயினும் நம்மை சீரழிக்கும் நீண்டகால சதி திட்டத்தின் முன்னோட்டம் என்கிற அடிப்படையில் தீவிரமாக எதிர்ப்பது நம்மின் சனநாயக கடமை என்தை சுட்டிக்காட் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழைகிறது. இந்நிலையில் பாஜகவின் சனாதன அரசின் இந்த சனநாயக விரோத மேலாதிக்கப் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது" இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.