பாஜகவில் ஐக்கியமாகும் நியனம எம்.பி.க்கள்.. இளையராஜா என்ன முடிவு எடுப்பாரோ? விசிக ரவிக்குமார் எம்.பி.
சென்னை: 2016-ம் ஆண்டு முதல் ராஜ்யசபாவில் நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்படும் பலரும் பாஜகவில் இணைந்துவிட்டனர்; இதனால் இப்போது ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜா என்ன முடிவு எடுப்பார்? என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லோக்சபா எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக ரவிக்குமார் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மாநிலங்களவை உறுப்பினர்களில் 12 பேரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்யவேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 80(1) சொல்வதாகும். பாஜக ஆட்சியில் 2016 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2022 உடன் முடிந்துவிட்டது. இன்னொருவருக்கு அக்டோபரில் முடிகிறது.
பண்ணைப்புரம் டூ பாராளுமன்றம்- ராஜ்யசபா நியமன எம்.பி.யான ராசய்யா எனும் இசைஞானி இளையராஜா!
இடஒதுக்கீடு அறிமுகமாகுமா?
மாநிலங்களவை உள்ளிட்ட மேலவைகளிலும் மக்களவை, சட்டசபைகளில் இருப்பதுபோல இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த பாஜக அரசு முன்வருமா ? தற்போது உள்ள பாஜக மாநிலங்களவை உறுப்பினர்களில் எத்தனை விழுக்காடு எஸ்சி, எஸ்டி உறுப்பினர்கள் உள்ளனர் என்ற விவரத்தை பாஜக வெளியிடுமா?
பதிலீடு கிடையாது
இளையராஜா அவர்களின் இசை விலை மதிப்பற்றது. அவரது இசைக்குத் தமிழ் மக்கள் தம் இதயங்களில் அளித்திருக்கும் இடம் மாநிலங்களவையில் வழங்கப்படும் இடத்தைவிடப் பல்லாயிரம் மடங்கு பெரியது.ஆறு ஆண்டுகளே ஆயுள் கொண்ட ஒரு பதவி ஒருநாளும் இசைஞானி என்ற பதவிக்குப் பதிலீடு ஆகிவிடாது.
8 பேர் பாஜகவில்..
பாஜக ஆட்சியில் 2016 இல் இருந்து நியமனம் செய்யப்பட்ட மொத்தம் 11 பேரில் 8 பேர் பாஜகவில் சேர்ந்துவிட்டனர். விளையாட்டு வீராங்கனை மேரி கோம், பொருளாதார நிபுணர் நரேந்திர ஜாதவ், பத்திரிகையாளர் ஸ்வபன்தாஸ் குப்தா ஆகிய 3 பேர் மட்டுமே சேரவில்லை.
பாஜகவில் இளையராஜா?
நியமனம் செய்யப்படுபவர் ஒரு அரசியல் கட்சியில் சேர்வதெனில் 6 மாதங்களுக்குள் சேரவேண்டும். திரு இளையராஜா என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது 6 மாதங்களுக்குள் தெரிந்துவிடும். குடியரசுத்தலைவர் தேர்தலுக்குமுன் மாநிலங்களவையில் தனது பலத்தை அதிகரித்துக்கொள்ள விரும்பும் பாஜக , இளையராஜாவை 6 மாதங்கள் வரை சுதந்திரமாக விட்டுவைக்குமா? இவ்வாறு ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.