இன்னொரு குரல்...எஸ்.சி இட ஒதுக்கீட்டை 21% ஆக உயர்த்த வேண்டும்: விசிக எம்.பி. ரவிக்குமார்
சென்னை: தமிழகத்தில் எஸ்.சி. இடஒதுக்கீட்டை 21% ஆக உயர்த்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் புதிய புதிய இடஒதுக்கீடு குரல்கள் எதிரொலித்து வருகின்றன. தங்களை எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று தேவேந்திரகுல வேளாளர்கள் கோரிக்கை வைத்து போராடுகின்றனர்.
இன்னொரு பக்கம் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் எஸ்.சி இடஒதுக்கீட்டு அளவை 21% ஆக உயர்த்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ரவிக்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் 2011 இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மொத்தமுள்ள மக்கள்தொகை 7,21,47,030 எனக் கண்டறியப்பட்டது. அதில் எஸ்சி பிரிவினரின் மொத்த மக்கள்தொகை 1,44,38,445 ஆகும். அது மொத்த மக்கள் தொகையில் 20.01% ஆகும்.
தமிழக அரசே! தமிழ்நாட்டில் எஸ்சி இட ஒதுக்கீட்டை 21% ஆக உயர்த்துக! pic.twitter.com/DJcCSkO4hG
— Dr Ravikumar M P (@WriterRavikumar) October 6, 2020
கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த அம்மக்களின் எண்ணிக்கையையும் உள்ளடக்கினால் அது இப்போது குறைந்தது 21% ஆக இருக்கும். எனவே எஸ்சி வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை 21% ஆக உயர்த்த தமிழக அரசு முன்வரவேண்டும். இவ்வாறு ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.