மூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த சண்முகம் சுப்பையா எய்ம்ஸ் உறுப்பினர்- திமுக, விசிக கடும் எதிர்ப்பு
சென்னை: சென்னையில் மூதாட்டி வீட்டு முன்பாக வேண்டும் என்றே சிறுநீர் கழித்து அராஜகத்தில் ஈடுபட்ட டாக்டர் சண்முகம் சுப்பையா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக்கப்பட்டுள்ளார். இதற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கடோச்சை மத்திய அரசு நியமித்திருக்கிறது. புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக இருப்பவர் வி.எம். கடோச்.
|
எய்ம்ஸ் உறுப்பினராக சுப்பையா
மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 4 மருத்துவர்கள் கொண்ட உறுப்பினர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை டாக்டர் சண்முகம் சுப்பையாவும் ஒருவர். சென்னையில் மூதாட்டி ஒருவரது வீட்டு முன்பாக வேண்டும் என்றே அநாகரிகமாக சிறுநீர் கழித்த சர்ச்சையில் சிக்கியவர் டாக்டர் சண்முகம் சுப்பையா. இதனால் சென்னை போலீசார் இவர் மீது வழக்கும் பதிவு செய்திருக்கின்றனர்.
டாக்டர் சுப்பையா
தற்போது அந்த டாக்டர் சண்முகம் சுப்பையாவை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. சமூக வலைதளங்களில் சண்முகம் சுப்பையாவுக்கு எதிரான பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
விசிக எம்பி ரவிக்குமார் எதிர்ப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லோக்சபா எம்.பி. ரவிக்குமாரும் இது தொடர்பாக எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், பெண்ணை துன்புறுத்திய குற்றச் சாட்டில் வழக்கு பதியப்பட்டவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமனம்: இது பெண்களை அவமதிப்பதில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
|
திமுக எம்.எல்.ஏ. எதிர்ப்பு
இதேபோல் திமுக எம்.எல்.ஏ. பி. தியாகராஜனும் தமது ட்விட்டர் பக்கத்தில் சண்முகம் சுப்பையா நியமனத்துக்கு எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். அவர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 3 எம்.பிக்கள் குழுவை அறிவிக்கவில்லை; ஆனால் சிறுநீர் சர்ச்சையில் சிக்கிய டாக்ட்ர் சண்முகம் சுப்பையாவை நியமித்திருக்கிறார்கள். இது பாஜகவின் ஜனநாயகவிரோத செயல் என கூறியுள்ளார்.