முதலமைச்சர் அறிவித்தது பொங்கல் பரிசுத் தொகையா..? வாக்குகளுக்கு முன்பணமா..? -திருமாவளவன் கேள்வி
சென்னை: முதலமைச்சர் அறிவித்தது பொங்கலுக்கு பரிசுத் தொகையா அல்லது வாக்குகளுக்கு முன்பணமா என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வினவியுள்ளார்.
புயல்-மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் என்ன ஆனது? என்ற கேள்வியையும் முன் வைத்துள்ள அவர் இது தொடர்பாக உரிய விளக்கம் தருமாறு முதலமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ரஜினிகாந்த்... கமல்ஹாசனால்... திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது... வாக்குகள் சிதறாது -கே.என்.நேரு
முதல்வருக்கு கேள்வி
அதிமுக சார்பில் தேர்தல் பரப்புரையைத் துவக்கிய மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,தமிழக மக்களுக்கு வழக்கத்திற்கு மாறான அளவில் பொங்கல் பரிசு ரூ.2500/- வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஒரு முதல்வராக செய்ய வேண்டிய அறிவிப்பை ஒரு கட்சியின் தேர்தல் பரப்புரையில் செய்வது முறையா? இது அப்பட்டமான விதிமீறலாகும். இது மக்களுக்கான நலத் திட்டமா? அல்லது வாக்குகளுக்காக வழங்கப்படும் முன்பணமா? என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
புயல் மழை
புயலாலும் மழை வெள்ளத்தாலும் பாதிப்புக்கு ஆளாகி இலட்சக் கணக்கான மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், அவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல் பொங்கல் பரிசு அறிவித்திருப்பது கவனத்தைத் திசைதிருப்பும் ஏமாற்று வேலையாகும். எனவே, புயல்-மழை வெள்ள நிவாரணத்தை உடனே அறிவிக்கவேண்டுமெனத் தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம்.
விளை நிலங்கள்
நிவர் மற்றும் புரெவி புயல்களாலும் அதனையொட்டிப் பெய்த பெருமழை வெள்ளத்தாலும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இலட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் முற்றாக அழிந்து போயிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன.
பயிர்கள் நாசம்
தோட்டப் பயிர்களும் ஏராளமாக நாசமாகி இருக்கின்றன. இந்த மழை வெள்ள சேதத்தை பார்வையிடுவதற்காக வருகைதந்த மத்திய குழு, மத்திய அரசிடம் என்ன பரிந்துரை செய்தது? அதனடிப்படையில் மத்திய அரசு இதுவரை ஏன் பேரிடர் நிவாரண நிதியை தமிழகத்திற்கு வழங்கவில்லை? அதைப் பெறுவதற்கு தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும்
நிவாரணம்
வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 30 ஆயிரமும், மற்ற பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும். அத்துடன், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் பத்தாயிரம் ரூபாயும் மற்ற பகுதிகளில் வாழ்வோர் அனைவருக்கும் குடும்பத்துக்கு ஐந்தாயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கூட்டாளி
மத்தியில் ஆளும் பாஜக அரசு, புயல் வெள்ள நிவாரண நிதியைப் போதிய அளவில் தமிழகத்துக்கு உடனே விடுவிக்கவேண்டும். அதற்காகத் தமிழக அரசு தனது கூட்டாளியான பாஜக அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தரவேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.