16-வது ஆண்டாக நோன்பு வைக்கும் திருமாவளவன்... ஏப்ரல் 26 முதல் 30-ம் தேதி வரையிலான 5 நாட்கள்..!
சென்னை: இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலானில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5 நாட்கள் நோன்பு வைக்கிறார்.
ஏப்ரல் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு திருமாவளவன் நோன்பு நோற்க இருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இசுலாமிய சனநாயகப் பேரவை உறுதி செய்துள்ளது.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்களும் பகலில் உண்ணாமல், பருகாமல், தான தர்மங்களை அதிகரித்து அவர்கள் நோன்பை கடைபிடிப்பது வழக்கம். மேலும், பசி என்பதை யாவருக்கும் உணர்த்தும் மாதமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடந்த 15 ஆண்டுகளாக நோன்பு நோற்பதை கடைபிடித்து வரும் நிலையில், 16-வது ஆண்டாக இந்தாண்டும் நோன்பு வைக்கிறார். கடந்த ஆண்டு 2 நாட்கள் மட்டுமே திருமாவளவன் நோன்பு வைத்த நிலையில் இந்த வருடம் 5 நாட்கள் நோன்பு வைக்கவுள்ளார்.
Exclusive: நோன்பு கஞ்சிக்கு ஈடு இணை எதுவுமே இல்லை... ரமலான் மாத நினைவலைகளை பகிரும் அமீர்..!
மத நல்லிணக்கத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையும் பேணும் வகையில் திருமாவளவன் நோன்பை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நோன்பு நோற்கும் நாட்களில் திருமாவளவன் சென்னையில் இருந்தார் என்றால் சஹர் (அதிகாலை உணவு), இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சிகள் களை கட்டும்.
சாம்கோ, அபுபேலஸ் போன்ற உணவகங்களில் திருமாவளவனோடு சேர்ந்து சஹர் உணவு சாப்பிடுவதற்காக ஒரு பெரிய படையே குவியும். அதேபோல் தன்னுடன் சேர்ந்து நோன்பு திறப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள இஸ்லாமிய பிரமுகர்களை மட்டுமல்லாமல் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களையும் திருமா அழைத்து இஃப்தார் விருந்து அளிப்பார்.
இந்நிலையில் இந்தாண்டு கொரோனா வைரஸ் 2-வது அலை பரவல் காரணமாக, ஹோட்டல்களுக்கு செல்வதை தவிர்த்து சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் மட்டுமே சஹர் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார் திருமா.