சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்
சென்னை: சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து பேசிய திருமாவளவன் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தச் சந்திப்பு அரசியல் களத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முதல்வரிடம் கோரிக்கை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் திருமாவளவன் சந்தித்து பேசிய போது, சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும், துணைத் தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார்.
ஆயிரம் கேள்விகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் திருமாவளவனும் சந்தித்து பேசியது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுவதுடன் அரசியல் களத்தில் புதிய புதிய கேள்விகளையும், ஐயங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
அவசரம் ஏன்?
உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியை போட்டியிட வேண்டும் எனக்கூறி இளைஞரணி நிர்வாகிகள் விருப்பமனு அளித்துள்ள நிலையில், அதனை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளார் திருமா. இது திமுகவுடன் அவருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
திருமா பேட்டி
முதலமைச்சரை சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தனது கோரிக்கை அடங்கிய மனுவை பரிசீலிப்பதாக முதல்வர் கூறியதாக தெரிவித்தார். மேலும், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பாகவும் கோரிக்கை வைத்ததாக கூறினார்.