ஸ்டெர்லைட் தீர்ப்பு- உச்சநீதிமன்றத்திலும் நீதியை நிலைநாட்ட வலியுறுத்துவோம்: திருமாவளவன்
சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்திலும் நீதியை நிலைநாட்ட தமிழக அரசை வலியுறுத்துவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்திருக்கிறது. அந்த ஆலை மீதான தடை தொடரும் என்றும் அறிவித்திருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம். வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் அங்கேயும் தமிழக அரசின் சார்பில் பொருத்தமான வழக்கறிஞர்களை நியமித்து இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள நீதியை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
சிபிஐக்கு போன அறிக்கை.. எரிமலையான மக்கள்.. நிலைப்பாட்டை மாற்றிய அரசு.. ஸ்டெர்லைட் குறித்து வைகோ!
மக்கள் தொடர் போராட்டம்
தூத்துக்குடியில் அமைந்திருக்கும் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை அங்கு காற்றையும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி பொதுமக்களுடைய உயிருக்கு ஆபத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறது என்று பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடினார்கள். அதன் தொடர்ச்சியாக அந்த ஆலை தமிழக அரசால் மூடப்பட்டது.
வேதாந்தாவின் சட்ட போராட்டம்
தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அங்கு தமிழக அரசின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்றம் இது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம் என்று அனுமதி அளித்தது.
சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு
அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்தது. இது தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்று கடந்த ஜனவரி மாதத்தில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே மார்ச் மாதத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை சீர்குலைந்த காரணத்தால் இந்த வழக்கின் தீர்ப்பு தாமதித்துக் கொண்டிருந்தது. இன்று அந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
815 பக்கத்தில் தீர்ப்பு
815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியிருக்கிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குப் போனாலும் அங்கும் நீதி நிலைநாட்டப்படுவதற்கு இந்தத் தீர்ப்பு உதவும் என்று நம்புகிறோம். இப்போது உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் இந்த முடிவை அறிவிக்கக்கோரித்தான் பொதுமக்கள் 2018 ஆம் ஆண்டில் அங்கே அறவழியில் போராடினார்கள். அவர்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டின் காரணமாக அப்பாவி பொதுமக்கள் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு- ஆணையம்
அதுதொடர்பாக விசாரிப்பதற்கு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. அந்த ஆணையம் இரண்டு ஆண்டுகளாகியும் எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. அதுபோலவே இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதில் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 4 மாதங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருந்தது.
விரைந்து முடிக்க வேண்டும்
ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் சிபிஐ அதில் குற்றப்பத்திரிகையைக்கூட தாக்கல் செய்யவில்லை. இப்போது ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் நீதி வழங்கி இருப்பது போலவே துப்பாக்கி சூடு வழக்கிலும் நீதி வழங்கப்படவேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை மக்கள் எதிர்நோக்குகின்றனர். இதை உயர் நீதிமன்றம் கவனத்தில்கொண்டு விரைந்து அந்த வழக்கிலும் நீதி வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.