திருமாவளவன் சகோதரி பானுமதி மரணம்... கொரோனாவால் உயிரிழந்த சோகம்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சகோதரி பானுமதி கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பானுமதி திடீரென உயிரிழந்தது அவரது சகோதரர் திருமா உட்பட விடுதலை சிறுத்தை கட்சியினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சுதந்திரத் திருநாளில் கொரோனாவில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற உறுதியை மேற்கொள்வோம்: மோடி
தம்பி மீது பாசம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் அக்கா பானுமதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மறைந்த பானுமதி தனது தம்பி திருமாவளவன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமா அழுகை
அக்கா பானுமதி இறந்த தகவலறிந்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் கண்ணீர் வடித்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இதனிடையே கொரோனா காரணமாக பானுமதி இறந்துள்ளதால் அவருடைய இறுதிச்சடங்கு சுகாதாரத்துறை விதிமுறைகளின் படியே நடைபெற உள்ளது. இதனால் பானுமதி உடலுக்கு அஞ்சலி செலுத்த யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
தினகரன் இரங்கல்
''விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அன்புச்சகோதரி திருமதி.பானுமதி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன். அன்னாரை இழந்து வாடும் சகோதரர் திரு.திருமாவளவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்''.
சீமான் ட்வீட்
''விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் நேசத்திற்குரிய சகோதரி திருமதி பானுமதி அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அண்ணன் திருமாவளவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்''.
ப.ரஞ்சித் இரங்கல்
அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களின் நேசத்திற்குரிய அக்கா திருமதி பானுமதி அவர்கள் உடல் நலக்குறைவால் இறந்த செய்தியை கேட்டு பெரும் துயரம் அடைகிறேன். ஆழ்ந்த இரங்கல்கள்!! இவ்வாறு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.