வாய்ப்பந்தல் போடாமல் உருப்படியான நலத்திட்டங்களை அறிவியுங்க...பிரதமர் மோடிக்கு திருமாவளவன் அட்வைஸ்
சென்னை: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றி உரை ஏமாற்றம் தரக்கூடியதாக இருந்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:
கொரோனா பெருந்தொற்றால் கடந்த பல மாதங்களாக நாட்டு மக்கள் சொல்லவொண்ணா அவதிக்குள்ளாகிக் கொண்டிருக்கையில், பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என்றதும் ஏதேனும் மக்களுக்கு நிவாரண அறிவிப்புகளைச் செய்வார் என்ற எதிர்பார்ப்பு நாடெங்கும் எழுந்தது. அதற்கு மாறாக மக்களுக்கு அறிவுரை சொல்வதோடு அவர் தனது பேச்சை முடித்துக் கொண்டிருக்கிறார். இது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
பெருந்தொற்றின் காரணமாக உலகில் உள்ள நாடுகளில் மிக மோசமாக இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. நாடு முழுவதும் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கிராமப்புறத்தில் வறுமை மிகுந்திருக்கிறது.
லாக்டவுன் முடிந்தாலும்.. வைரஸ் இன்னும் அப்படியேதான் இருக்கு.. கவனமாக இருங்கள்.. மோடி வார்னிங்!
வெங்காயம் விலையும் ஏறிவிட்டது
அத்தியாவசியப் பொருளான வெங்காயம் கூட கடுமையாக விலையேற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மக்களுக்கு நிவாரண அறிவிப்புகளைச் செய்வதற்காகத்தான் பிரதமர் உரையாற்றப் போகிறார் என்று எதிர்பார்த்தோம். அதற்கு மாறாக, ‘திருவிழா காலம் வந்துவிட்டது முகக் கவசம் அணியாமல் வெளியில் செல்லாதீர்கள்' என்று அறிவுரை சொல்வதோடு அவரது பேச்சு முடிந்திருக்கிறது.
அறிவுரை அல்ல- நிவாரணம்
இப்போது மக்களுக்குத் தேவை அறிவுரை அல்ல; நிவாரணம்! இதைப் பிரதமர் புரிந்து கொள்ளவில்லையா? அல்லது மக்களைப் பற்றிக் கொஞ்சமும் அவருக்குக் கவலையில்லையா? என்ற கேள்விதான் எழுகிறது.
கொரோனாகால கொடும் சட்டங்கள்
கொரோனா பெருந்தொற்றைப் பயன்படுத்திக்கொண்டு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது, சமையல் எரிவாயு மானியத்தை ரத்துசெய்வது, தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை ரத்து செய்வது - என மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களைத் துன்புறுத்தி வருகிறது.விவசாயிகளைக் கூட விட்டு வைக்காமல் கொடும் சட்டங்களை இயற்றியிருக்கிறது.
பொருளாதார வளர்ச்சி என பொய்
பாஜக அரசின் நடவடிக்கைகளால் ஏற்கனவே நொந்து போயிருக்கும் மக்களை மேலும் நோகடிப்பதுபோல ‘ பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது' என அப்பட்டமான பொய்யைச் சொல்வது மக்களைப் பற்றி பிரதமர் என்னதான் நினைக்கிறார் என்பது விளங்கவில்லை. இக்கட்டான காலகட்டத்தில் இப்படி வாய்ப்பந்தல் போடாமல் மக்களுக்கு உருப்படியான நலத்திட்டங்களை அறிவிப்பதற்கு பிரதமர் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்!. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.