சென்னை அருகே பாஜக நடிகை குஷ்பு தங்க வைக்கப்பட்ட சொகுசு விடுதி முற்றுகை- விசிகவினர் மீது தடியடி
சென்னை: சென்னை அருகே பாஜக நடிகை குஷ்புவை போலீசார் கைது செய்து தங்க வைத்திருந்த சொகுசு விடுதியை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் படுகாயம் அடைந்தனர்.
Recommended Video
மனுதர்மம் அனைத்து பெண்களையும் விபச்சாரிகள் என குறிப்பிடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு 1 மாதம் கழித்து சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கினர். திருமாவளவன் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்தனர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் தமிழகம் முழுவதும் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்தினர்.
முட்டுக்காடு அருகே நடு ரோட்டில் காரை தடுத்து நிறுத்திய போலீஸ்.. குஷ்பு அதிரடி கைது
போலீசால் குஷ்பு கைது
இந்த நிலையில் திருமாவளவனின் சிதம்பரம் தொகுதியில் அவரை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜகவின் நடிகை குஷ்பு சென்னையில் இருந்து இன்று காலை சிதம்பரத்துக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் சென்னை அடுத்த முட்டுக்காடு அருகே குஷ்புவை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சொகுசு விடுதியில் குஷ்பு
பின்னர் குஷ்பு உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து கேளம்பாக்கம் சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைத்தனர். அங்கு வீடியோ ஒன்றை வெளியிட்ட குஷ்பு, திருமாவளவனை அண்ணன் என்று சொல்லி வந்தேன். பெண்களை இழிவாக பேசும் அவரை எப்படி அண்ணன் என நான் சொல்ல முடியும்? திருமாவளவன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என கூறியிருந்தார்.
விசிக முற்றுகை போராட்டம்
இந்நிலையில் குஷ்பு தங்க வைக்கப்பட்ட கேளம்பாக்கம் சொகுசு விடுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50 பேர் திடீரென முற்றுகையிட்டனர். குஷ்புவே மன்னிப்பு கேள்! குஷ்புவை கைது செய்! என அவர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு சொகுசு விடுதிக்குள் நுழைய முயன்றனர். அதேநேரத்தில் பாஜகவினர் சிலர் பாரத் மாதா கீ ஜே எனவும் கோஷம் போட்டனர்.
போலீசார் தடியடி
இதனையடுத்து போலீசார் அங்கு கூடியிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி நடத்தினர். இதனால் விடுதலை சிறுத்தைகள் சம்பவ இடத்தை விட்டு வெளியேறினர். பாஜகவினரை போலீசார் அங்கிருந்து கலைந்து செல்லவும் அறிவுறுத்தினர். இதனால் கேளம்பாக்கம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.