பாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்
சென்னை: விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் பா.ஜ.கவின் துணை அமைப்பாக மாறியுள்ள அ.தி.மு.கவுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை வெளியிட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியில் தி.மு.கவும் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டு உள்ளது.
திமுக-காங். வேட்பாளர்கள்
இந்த இடைத்தேர்தல்களில் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்த மூன்று தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாகப் பாடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திமுகவே வென்று இருந்தது
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.கவும் , நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருந்தனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட இந்தத் தொகுதிகளில் தி.மு.க அணி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது.
திமுக வெல்வது உறுதி
எனவே இந்தத் தொகுதிகளில் தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என்பது உறுதி. மத்தியில் ஆளும் பா.ஜ.க ஆட்சியின் மக்கள் விரோத கொள்கைகளாலும் கடுமையான பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். தமிழகத்தில் நடப்பது பா.ஜ.கவின் மறைமுக ஆட்சிதான்.
அதிமுகவுக்கு மக்கள் பாடம்
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை பா.ஜ.க ஆளும் மாநிலங்களை முந்திக்கொண்டு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவது இதற்கொரு சான்றாகும். அ.தி.மு.க அமைச்சர்கள் தமது தலைவர்களைப் பற்றிப் பேசுவதைவிட பா.ஜ.க தலைவர்களைப் புகழ்ந்துபேசி அவர்களிடம் நற்சான்று பெறுவதிலேயே குறியாக உள்ளனர். இவற்றையெல்லாம் மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ.கவின் துணை அமைப்பாக மாறிவிட்ட அ.தி.மு.கவுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்பது உறுதி' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.