திமுகவுக்கு குட்பை... சட்டசபை தேர்தலில் அதிமுக அணிக்கு 'ஜம்ப்'... திருமா சூசகம்
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டசபை தேர்தலில் அதிமுக அணிக்கு தாவக் கூடும் என்பதை அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சூசகமாக வெளிப்படுத்தி உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் குறைந்தது மிக அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டு சொந்த பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர வேண்டும் என்பது திமுக வியூகம். இதனால் கூட்டணி கட்சிகளுக்கு மிகக் குறைவான தொகுதிகளை மட்டுமே திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
இதனால் லோக்சபா தேர்தலில் திமுக அணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் அதிமுக அணிக்கு தாவ இப்போதே துண்டு போட்டு வைக்கத் தொடங்கிவிட்டன. இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
கானல் நீர் போல தங்கதமிழ்ச்செல்வனின் கனவு மறைந்துவிடும்... செங்கோட்டையன் பதிலடி
அந்த பேட்டியில், சட்டசபை தேர்தலும் லோக்சபா தேர்தலும் வெவ்வேறானவை. சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து இப்போதே பேச முடியாது. தற்போதைய நிலையில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. அடுத்த லோக்சபா தேர்தலுக்கு 5 ஆண்டுகள் இருக்கின்றன.
கூட்டணி விவகாரத்தில் திமுக, அதிமுக எந்த பிரச்சனைகளை கையில் எடுக்கின்றன என்கிற நிலைப்பாட்டை முன்வைத்தே நாங்கள் கூட்டணியை முடிவு செய்ய முடியும். அதிமுக- பாமக கூட்டணி அமைந்ததால் அதிமுகவுக்கு இயல்பாகவே வரவேண்டிய தலித் வாக்குகள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டன என திருமாவளவன் கூறியுள்ளார்.
அதிமுக அணியில் பாமக இடம்பெறாவிட்டால் விடுதலை சிறுத்தைகள் இணைய தயார் என்பதை வெளிப்படுத்தும் வகையில்தான் திருமாவளவன் இப்பேட்டியளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.