பொன் மாணிக்கவேல் ஆர்எஸ்எஸ் கைக்கூலி.. கைது செய்யுங்கள்.. விடுதலை சிறுத்தைகள் ஆவேசம்
சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி, பொன் மாணிக்கவேல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைக்கூலி என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சிலை தடுப்புப் பிரிவு சிறப்பு பிரிவில் பணியாற்றிய காவல்துறையைச் சேர்ந்த 60 பேரை விடுவிப்பு செய்துள்ளார் பொன் மாணிக்கவேல். இதற்குப் பதில் புதிதாக 60 பேரை நியமிக்க கேட்டு, உள்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார் பொன் மாணிக்கவேல்.
இதனிடையே, திடீர் திருப்பமாக, சிலை கடத்தல் வழக்குகளில் உரிய ஆவணங்கள், சாட்சிகள் இல்லாமல் சட்டத்துக்கு முரணான வகையில் வழக்குப் பதிவு செய்யச் சொல்வதாக 13 காவல்துறையினர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்
போலீசார் புகார்
ஆறு மாதம் பணியாற்ற வேண்டிய இடத்தில் 1.5 வருடங்கள் பணியாற்றி உள்ளதாக தடுப்புப் பிரிவில் இருக்கும் மேலும் சில காவல்துறையினர், தங்களையும் விடுவிக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வன்னி அரசு சாடல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு இதுபற்றி கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அறநிலையத்துறை என்ற ஒரு துறையே இருக்கக் கூடாது என திட்டமிட்டுள்ளது பாஜக. ஏனெனில், தமிழகத்தில் மட்டும் அறநிலையத்துறை என்ற பெயரில் அனைத்து சாதியினரும் முக்கியப் பதவிகளில் உள்ளனர்.
ஆர்எஸ்எஸ் கைக்கூலி
குறிப்பிட்ட ஒரு ஜாதியினர் இல்லாமல் எல்லா ஜாதியினரும் பொறுப்புகளில் இருப்பததுதான் பாஜகவிற்கு பெரிய பிரச்சினை. இதற்காகத்தான் பொன் மாணிக்கவேல் வந்துள்ளார். அறநிலையத்துறையை ஒழித்துக்கட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கைக்கூலியாக பொன் மாணிக்கவேல் களம் இறக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பணிபுரியும் பிரிவில் உள்ள காவல்துறை அதிகாரிகளே அவர் மீது புகார் அளித்துள்ளனர்.
கைது செய்ய வேண்டும்
தமிழக காவல்துறை வரலாற்றிலேயே உயர் அதிகாரி ஒருவர் மீது காவல்துறையினரே இணைந்து புகார் அளிப்பது இதுதான் முதல்முறை. காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுப்பதே குற்றம் என்பதால், பொன் மாணிக்கவேலை துணிச்சலுடன் தமிழக அரசு கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.