கடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு
சென்னை: காய்கறிகளின் வரத்துக் குறைந்ததால், கோயம்பேடு சந்தையில் மீண்டும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பருவ மழை பெய்யாததாலும் கடும் வறட்சி காரணமாகவும் காய்கறி உற்பத்தி குறைந்துவிட்டது. கோயம்பேடு காய்கறி மொத்த மார்க்கெட்டுக்கு காய்கறி லாரி லோடு வரத்து பாதியாக குறைந்துள்ளது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்பட அண்டை மாநிலங்களிலும் கடும் வெயில் காரணமாக காய்கறி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக காய்கறிகளின் வரத்து 60 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளதால், வழக்கத்தை விட
முன்று மடங்கு அதிக விலைக்கு காய்கறிகளை விற்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளொன்றுக்கு 400 லாரிகளில் காய்கறிகள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது 200 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன.
அயோத்தி தீவிரவாத தாக்குதல் வழக்கு.. உடந்தையாக இருந்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை
தற்போதைய விலையேற்றத்தின் படி பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் இஞ்சி, பீன்ஸ் ஆகியவை ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், தாக்காளி கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கேரட், பீட்ரூட், அவரைக்காய், புடலங்காய், முருங்கைக்காய், உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 10 லாரிகளில் பீன்ஸ் கொண்டுவரப்படும். தற்போது இது பாதியாக குறைந்து விட்டது. இதனால் பீன்ஸ் விலை ரு.150 ஆக உயர்ந்தது. கடந்த சில நாட்களாக உதகைமண்டலத்தில் உற்பத்தியாகும் பீன்ஸ் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரவில்லை.கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை இரட்டிப்பாகி விற்கப்படுகிறது. பாகற்காய், புடலங்காய் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது.
போதிய தண்ணீர் இல்லாததால், கடந்த ஒரு மாத காலமாக காய்கறி சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஒரு மாத காலத்தில் பெரும்பாலான காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. இதனால், தேனி , தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்கறிகளின் விலை 50 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. வரத்து குறைவால், சில மணி நேரங்களில் காய்கறிகள் விற்று தீர்ந்துவிடுவதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.