இனி காய்கறி, மளிகை பொருட்களை மதியம் 1 மணி வரை மட்டுமே வாங்கலாம்.. தமிழக அரசு
சென்னை: இனி காய்கறி, மளிகை பொருட்களை மதியம் 1 மணி வரை மட்டுமே வாங்கலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் சமூக விலகலை ஊக்குவிக்க காய்கறி, மளிகைச் சாமான் விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 2.30 மணி வரை திறந்திருக்கும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சமூக விலகலை மேலும் இறுக்கும் விதமாக அத்தியாவசிய பொருட்களுக்கான நேரத்தை மேலும் குறைத்து உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இதுகுறித்து அவர் கூறுகையில் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். அந்த நேரத்தில் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வரும்.
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்க அரசுடன் சமூக ஆர்வலர்கள் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கிறோம். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அனைவரையும் தாக்கக் கூடியது. மதச் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும். மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.