சென்னையில் வீடு தேடி வரும் காய்கறிகள்.. 850க்கு மளிகை காம்போ பேக்.. எப்படி பெறுவது
சென்னை: சென்னையில் பிற்பகல் 1மணிக்குள் ஆர்டர் செய்து காய்கறி வீட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளார். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்காக வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் தடுப்பதற்காக அந்த பொருட்கள் வீடு தேடி வரவழைக்கும் புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி துவங்கி உள்ளது.
இதன்படி சென்னையில் 20 குடும்பங்களுக்கு மேல் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள கீழ்கண்ட எண்களை மதியம் ஒரு மணிக்குள் தொடர்பு கொண்டு காய்கறிகளை பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பல வீடுகள் சேர்ந்து மொத்தமாக வேண்டும் என்பவர்கள் ஆர்டர் செய்ய வேண்டிய தொலைப்பேசி எண்கள் பின்வருமாறு:
044-24791133
90256 53376
73050 50541
73050 50542
73050 50543
73050 50544
தனிநபர்கள் தங்களுக்கு காய்கறிகள் வேண்டும் என்றால் ஜுமோட்டோ, ஸ்வீகி மற்றும் டுன்ஜோ ஆகிவிற்றின் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இதுவரை http://www.cmdachennai.gov.in/ என்ற இணையதளம் வழியாகவும் காய்கறிகளை ஆர்டர் செய்யலாம்.
இதுதவிர சென்னை மாநகராட்சி சார்பில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி அங்காடிகள் துவக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு தேவையான காம்போ பேக்கை ரூ.850க்கு வாங்கிக்கொள்ளலாம். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், "கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இடையூறு இன்றி காய்கறிகள், மளிகை பொருட்களை வீட்டின் அருகே வரும் தள்ளுவண்டிகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த நடமாடும் மளிகை அங்காடிகளில் நான்கு நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு 15 நாட்களுக்கு தேவைப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய், மிளகாய், உப்பு மற்றும் இதர மளிகை பொருட்கள் அடங்கிய காம்போ பேக் ரூ.850க்கு கிடைக்கும். இதன் மூலம் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கலாம் என்றார்.