வாகன ஓட்டிகள் அசல் லைசென்ஸ் வைத்திருப்பது கட்டாயம்.. ஹைகோர்ட் மீண்டும் உறுதி
சென்னை: எந்த ஒரு வாகனத்தையும் இயக்கும் வாகன ஓட்டிகள், அவர்களுடன் ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
லைசென்ஸ் வைத்திருக்காத ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுப்பது காவல்துறையினருக்கு கடினமாக உள்ளது என்றும், 3 முறை ஒரே மாதிரியான விதிமுறைகளை மீறுவோர் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய முடியும் என்ற போதிலும் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காத காரணத்தால் அது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இன்று இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது லாரி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நவம்பர் 19ஆம் தேதி இது தொடர்பாக மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதை சுட்டிக் காட்டினார்.
அதன்படி, வாகன ஓட்டுநர் உரிமம், அல்லது, டிஜிட்டல் வாகன ஓட்டுனர் உரிமத்தை தங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து மனுதாரர் கோரிக்கையை, மத்திய அரசு உத்தரவு உறுதி செய்துள்ளது என்பதால், இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வழக்கை முடித்து வைத்தனர் நீதிபதிகள்.
மத்திய அரசின் அறிவுறுத்தல் ஏற்கனவே அமலில் உள்ள காரணத்தினால் நீதிமன்றம் மீண்டும் அது தொடர்பாக உத்தரவிடவில்லை. ஆனால், அசல் லைசென்ஸ் வைத்திருப்பது கட்டாயம் என்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்பட வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.