வெள்ளம் வந்தாலும் காரு முக்கியமில்லையா.. மேம்பாலத்தில் கார்களை பார்க் செய்த வேளச்சேரிவாசிகள்
வேளச்சேரி பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ள நீரினால் வாகனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க கார், இருசக்கர வாகனங்கள், வேன்களை ரயில்வே மேம்பாலத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
சென்னை: நிவர் புயல் தாக்கத்தால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநகரின் தாழ்வான பகுதிகளான மடிப்பாக்கம், வேளச்சேரி போன்ற பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வாகனங்களில் வெள்ளநீர் புகுந்து விடாமல் இருக்க வேளச்சேரியில் வசிப்பவர்கள் தங்களின் வாகனங்களை மேம்பாலத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
Recommended Video
சென்னையிலும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக விடாமல் மழை கொட்டி வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் ஆறாக பெருகி ஓடும் தண்ணீரினால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் உள்ள ஆற்றிலும் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வேளச்சேரி பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதுடன், இன்று நண்பகலுக்குப் பிறகு காற்றின் வேகமும் அதிகரித்துள்ளதால் முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதனால் தங்கள் வீடுகளுக்கு முன் வாகனங்களை நிறுத்தி வைக்க முடியாமல், இப்பகுதி மக்கள் அருகிலுள்ள மேம்பாலத்தின் இருபுறத்திலும் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
பலத்த காற்று வீசுவதால் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. மழை வெள்ளம், மின் இணைப்பு துண்டிப்பு, பலத்த காற்று என அனைத்தும் ஒரு சேர சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். வேளச்சேரியில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர்.
முதியவர்களை சுமந்து மீட்கும் சென்னை காவலர்கள்.. காவல் துறை ஆணையர் பாராட்டு