கெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..!
சென்னை: ஆட்களைத் திரட்டி வந்து கெத்து காட்டும் "பண்டைய நாகரீகம்" இன்றும் அதிமுக ஆட்சியில் தொடருவது ஆச்சரியமாகவே உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக தனது தொகுதியில் இருந்து 2 பஸ்களில் ஆட்களை திரட்டி வந்து கெத்துக்காடிவிட்டார் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.
ஒவ்வொரு அமைச்சரும் தனது துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் போது, தனக்கு நெருக்கமானவர்களை விவாதத்தை பார்வையிட அழைத்து வருவது வழக்கம். அந்த வகையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கடந்த வாரமே தொகுதி முழுவதும் நிர்வாகிகளுக்கு போன் போட்டு 15-ம் தேதி அவசியம் சென்னை வந்தாக வேண்டும் என உத்தரவு போட்டுவிட்டார்.
சில்லித்தனமா பேசினா பதில் சொல்ல மாட்டேன்.. துரைமுருகன் சுளீர் பேச்சு!
சில நிர்வாகிகள் கல்யாணம், காதுகுத்து இருக்கு என கூறியுள்ளார்கள். ஆனால் வெல்லமண்டி யாரையும் விடுவதாக இல்லை, செலவை பற்றி கவலைப்பட வேண்டாம் எனக் கூறி சொந்த செலவில் சொகுசு பேருந்துகளை பிடித்து சட்டப்பேரவை வளாகத்தில் ஆட்களை குவித்து விட்டார்.
மற்ற அமைச்சர்கள் யாரும் செய்யாத ஒன்றை இவர் செய்து பத்திரிகையாளர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார். 15ம் தேதி பேரவை வளாகம் முழுவதும் வெல்லமண்டியின் புகழ்பாடிகள் தான் சுற்றித்திரிந்தனர்.
என்ன இருந்தாலும் கூட்டமாக ஊர்க்காரர்களைப் பார்த்தாலே ஒரு கெத்துதானே!