இவர்களால்தானே தேர்தலே ரத்தானது.. மறுபடியும் வேட்பாளர்களா.. தீபலட்சுமி கேட்பதில் என்ன தப்பிருக்கு
வேலூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் தீபலட்சுமி புகார் மனு அளித்துள்ளார்
சென்னை: வேலூர் தொகுதியின் அதிமுக, திமுக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீப லட்சுமி புகார் மனு அளித்துள்ளார்.
வேலூர் தொகுதியில் பிரச்சார சமயத்தில், காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீடு, அவரது மகன் கதிர்ஆனந்த் நடத்தும் பள்ளி, கல்லூரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
தோண்ட தோண்ட பணம் என்ற வாசகத்துடன் செய்திகள் தினந்தோறும் வெளிவந்தன. இதையடுத்து, வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற இருந்த தேர்தலை ரத்து செய்ய தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. அதை ஏற்று, வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு செக்? 400 காங். நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு மனு
ஏசி சண்முகம்
அப்போதே ஏசி சண்முகம், சம்பந்தப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்யாமல் ஒட்டுமொத்தமாக தேர்தலை நிறுத்துவது சரியா என்று கேள்வி எழுப்பி கோர்ட் வரை போனார். இறுதியில் அவருக்கு சாதகமான பதில் கிடைக்காமல் போகவும் நொந்தே போனார்.
செலவு செய்த பணம்
இவரை போலவே, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீபலட்சுமியும் "அதிமுக, திமுக தரப்பில் பணப்பட்டுவாடா நடக்கிறது.. இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், திரும்பவும் போட்டியிட வேட்பாளர்களாக அறிவிக்க கூடாது... இப்போ ஏன் தேர்தலை ரத்து செய்யணும். நாங்க செலவு செய்த பணம் எங்களுக்கு திரும்ப கிடைக்குமா? ஒரு பெண் வேட்பாளர், நானே வீடு வீடாக களமிறங்கி மக்களை சந்தித்து ஓட்டு கேட்கும்போது, இவர்கள் ஏன் பணம் தந்த ஓட்டு கேட்கிறாங்க? தப்பு செய்தவர்களை தகுதி நீக்கம் செய்யணும், திரும்பவும் அதே வேட்பாளரை நிறுத்தக்கூடாது" என்று கொதித்து போய் கேட்டிருந்தார்.
10 கோடி ரூபாய்
இப்போதும் இதையேதான் கேள்வி கேட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையம்புகாரும் அளித்துள்ளார். தீபலட்சுமி கேட்ட கேள்வியில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அன்று, சுமார் ரூ.10 கோடிக்கு மேல் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக சொன்னதே அதிகாரிகள்தான். அப்படியானால் அதிகாரிகள் சொன்ன தகவல் உண்மையில்லையா? ஒருவேளை உண்மையாயின், 10 கோடி ரூபாய் புகார் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று இதுவரை தெரியவில்லை.
நடவடிக்கை என்ன?
மேலும் பிடிபட்ட பணமெல்லாம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும் சொல்லப்பட்டது. அதிகாரிகளின் இந்த கூற்று உண்மையானால், சம்பந்தப்பட்டவர்கள் மேல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது? குற்றம் சாட்டப்பட்ட விஷயங்கள் எல்லாம் உண்மைதானா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படாமலேயே உள்ளதே ஏன்?
தேர்தல் ஆணையம்
பணப்பட்டுவாடா நடந்தததாக சொல்லப்பட்டதில் இறுதி முடிவுதான் என்ன? பணப்பட்டுவாடா நடந்தா, நடக்கவே இல்லையா? தோண்ட தோண்ட பணம் என்றார்களே, அது எங்கிருந்து எடுத்தார்கள்? யார் பணம்? இதெல்லாம் தேர்தல் ஆணையம் வெளிக்கொண்டு வந்து மக்களுக்கு தெளிவுபடுத்தவில்லையே ஏன்? இதை செய்யாமல், திரும்பவும் சர்ச்சைக்கு உள்ளானவர்களையே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுவிட்டால், ஆணையத்தின் நிலைப்பாடுதான் என்ன?
அரவக்குறிச்சி
அன்று அரவக்குறிச்சியில் இதே மாதிரி ஒரு புகார்தான் எழுந்தது. ஆனால் அப்போதும் சர்ச்சைக்கு உள்ளானவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். ஒருவேளை அரவக்குறிச்சி தேர்தலின்போதே இந்த குறைகளை தேர்தல் ஆணையம் சரிசெய்திருந்தால் இன்று வேலூர் வரை விஷயம் பெரிதாக எழுந்திருக்காது. எதுவானாலும் எல்லாமே தேர்தல் ஆணையத்தின் கையில்தான் உள்ளது!