நடைபெறவிருக்கும் வேலூர் தேர்தலில்.. அதிமுக கூட்டணி சார்பில்.. வேற யாரு.. ஏசிஎஸ்தான்!
சென்னை: வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது, வேலூர் தொகுதியில் அதிக அளவில் பணபட்டுவாடா உள்ளது என புகார் எழுந்தது. இதனையடுத்து வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வருமான வரித் துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இதில், 10 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
இதனால், வேலூர் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. கடந்த தேர்தலின் போது திமுக கூட்டணி சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர்ஏ.சி.சண்முகம் போட்டியிட்டனர்.
இந்நிலையில், வேலூர் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தலும், இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 11ஆம் தேதியும் தொடங்க உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. போட்டியிடவுள்ள கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.