வேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்
சென்னை: வேலூர் லோக்சபா தேர்தலில் வெற்றிக்கனியை பறித்து கலைஞர் கருணாநிதியின் காலடியில் காணிக்கையாக்குவோம் வாருங்கள் என திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்து வருபவர்கள் செய்த சதிவேலையால் தான் ஏற்கனவே வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்டது என புகார் கூறியுள்ளார் ஸ்டாலின். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்டாலின், வேலூரில் நடத்தப்பட்ட நாடகங்களை கடந்து தான் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 மக்களவை தொகுதிகளை கைப்பற்றியது.
பொய் புகாரால் வேலூரில் தேர்தல் நிறுத்தபட்ட போதும், தேனி தொகுதியில் நடைபெற்ற தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தவில்லை. தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கைகளை பொதுமக்களே நன்கு அறிவார்கள்.
எனினும் தேர்தலில் வெற்றி பெற்ற 37 திமுக கூட்டணி எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் வேகம் மற்றும் விவேகத்துடன் செயல்பட்டு வருகின்றனர். புதிய தேசிய கல்விகொள்கை, மும்மொழி திட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி எம்பி-க்கள் முழங்கினர்.
தமிழை புறகக்ணித்த அஞ்சல்தறை தேர்வு தமிழக எம்பி-க்களின் உரிமை முழக்கத்தால் ரத்தானது என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் மக்களுக்கான உருப்படியான திட்டங்கள் என்று எதையுமே சொல்ல முடியாது. வெற்று அறிவிப்புகள், வீண் சபதம், தமிழக மக்களுக்கு பச்சை துரோகம் இழைக்கும் நடவடிக்கைகள் தான் தொடர்கின்றன என சாடியுள்ளார்.
ஆளுந்தரப்பின் அதிகார பலம், பண பலம், கபட நாடக பலத்தை எதிர்கொள்ள திமுக-விடம் இருப்பது செயல் பலம் மட்டுமே. ஜனநாயக வழயில் பெறும் வெற்றியே மலர்ந்து மணம் வீசவிருக்கும் நல்லாட்சிக்கு அடித்தளமாக அமையும்.
எனவே வேலூர் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்கிட திமுக-வினர் உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 5 வரை ஆர்வம் சிறக்க அயராது பணியாற்றி, வெற்றிக் கனியைப் பறித்து, கருணாநிதியின் திருவடியில் காணிக்கை ஆக்கிடுவோம் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.