ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.. எம்.பி.யான கதிர் ஆனந்த் 'கன்னி பேட்டி'
சென்னை: வேலூரில் கிடைத்த வெற்றி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. ஆரம்பம் முதலே, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ சி சண்முகம் ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவியது.
யார் வெற்றி பெறுவார்கள் என்று பெரும் இழுபறி நிலை நீடித்த நிலையில், மாலை சுமார் நாலு மணி அளவில் வெற்றி விபரம் முழுமையாக தெரியவந்தது. இதன்படி கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவருக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை பெறுவதற்காக வருகை தந்த கதிர் ஆனந்த், நிருபர்களிடம் எம்பியாக தனது முதல் பேட்டியை வழங்கினார். அவர் கூறுகையில் திமுக தலைவர் ஸ்டாலினின், கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இதை பார்க்கிறேன். இந்த வெற்றியை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, காணிக்கையாக்குகிறேன், என்று அவர் தெரிவித்தார். அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன் உடனிருந்தார்.