ஒவ்வொரு காமக்கொடூரனும்.. அணு அணுவாக தண்டனை பெற்று மடிய வேண்டும்.. வேல்முருகன் ஆவேசம்
அணு அணுவாக தண்டனை தந்து கயவர்கள் மடிய வேண்டும் என்று வேல்முருகன் கூறியுள்ளார்
Recommended Video
சென்னை: "ஒரு சிறுமி.. என்ன வயதிருக்குமோ தெரியல.. என்னை விட்டுவிடுங்கள் என்று கதறுகிறாள்... அந்த காமவெறியன் விடாமல் இளம் தளிரை அக்கிரமாக, அநியாயமாக சீரழிக்கிறான். கதற கதற, துடிக்க துடிக்க இளம்பெண்களை கற்பழித்த காமக்கொடூரன்கள் அணு அணுவாக தண்டனை பெற்று மடிய வேண்டும்" என்று வேல்முருகன் உணர்ச்சி பெருக்கோடு வலியுறுத்தி உள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு சில தினங்களாக உடம்பு சரியில்லை. அதனால் சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனினும், சில முக்கிய விஷயங்களை பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், பொள்ளாச்சி சம்பவத்துக்கும் கண்டனம் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான இளம் தங்கைகளை, பள்ளி மாணவிகளை, வேலைக்கு செல்லும் என்னுடைய இளம் சகோதரிகளை ஒரு கூட்டம் திட்டமிட்டு, ஆசை வார்த்தை கூறி அழைத்து செல்கிறது.
இதில் கூட அரசியலா? கயவர்களுக்கு தேவை கடும் தண்டனைதான் .. செய்யுமா கட்சிகள்! !
காமவேட்டை
"நாங்கள் ஆளுங்கட்சி பிரமுகர்கள், என் பெயர் நாகராஜ்" என்று சொல்லி, அறிமுகப்படுத்தி, "எனக்கு அமைச்சர் பெருமக்களோடு தொடர்பு இருக்கிறது, உயர்ந்த அதிகார அதிகாரிகளுடன் தொடர்பு இருக்கிறது, நான் இடங்களுக்கு வந்தால் உங்களுக்கு வேலைகிடைக்கும், பணம் கிடைக்கும்" என்று ஏழ்மை நிலையில் இருக்கின்ற அந்த அப்பாவி பெண்களுக்கு ஆசைவார்த்தை காட்டி, அரசு விடுதிகளிலும், தனியார் பங்களாக்களிலும், தோப்புக்களில் இருக்கின்ற குளிரூட்டப்பட்ட அறைகளில் அழைத்து அவர்களின் கற்புக்களை சூறையாடி காமவேட்டை நடத்தியுள்ளனர்.
காமவெறியன்
அப்படி நடத்தப்பட்ட காம வீடியோவின் புகைப்படங்களை கையில் வைத்து கொண்டு, திரும்ப திரும்ப அழைத்தும்.. அவர்களின் தோழிகளை அழைத்து வர சொல்லியும் செய்திருக்கிறான் அதிமுகவின் பொள்ளாச்சி அம்மா பேரவை என்கிற பொறுப்பில் இருக்கிற அந்த நாகராஜ் என்ற காமவெறியன்.
நடமாடுகிறார்கள்
அவனோடு இந்த செயலில் ஈடுபட்ட கயவர்களும் இன்று பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, அழுத்தங்களுக்கு பிறகு, கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் இன்று நிர்மலாதேவி போல் சிறையில் 6 மாத காலம் அடைக்கப்படவில்லை. சில நாட்களிலேயே அவர்கள் வெளியில் விடப்பட்டிருக்கிறார்கள்.
மத்திய சிறப்பு புலனாய்வு
நீண்ட நாட்கள் சிறையில் இருந்தால், சிபிஐ உள்ளே நுழைந்து விசாரணையில் அவர்கள் உண்மையில் கக்கிவிடுவார்களோ என்ற பயத்தில், ஆட்சி அதிகாரத்தில் பெரிய மனிதர்கள் என்று பிதற்றிக் கொண்டிருப்பவர்களின் துணையில் அவர்கள் வெளியில் நடமாடி கொண்டிருக்கிறார்கள். இவர்களை சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் என்று சொன்னால் இதில் மத்திய சிறப்பு புலனாய்வு பிரிவு நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
பாசிச கும்பல்
இதற்காக ஒரு மிகப்பெரிய போராட்டத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி நடத்த இருக்கிறது. இன்னும் ஓரிரு நநாளில் நான் சிகிச்சை முடிந்து வெளியே வந்து விடுவேன். கற்பழித்த கயவர்களை தண்டிப்பதற்கும், இவர்களுக்கு பின்னால்இருந்து பெண்களை காம வேட்டைக்கு இச்சையாக்கிய அரசு பணியில் அமர்ந்து கொண்டிருக்கிற பாசிச கும்பல்களையும் அடிமை அரசு கும்பல்களையும் தண்டிப்பதற்கு நீங்கள் அனைவரும் கை கோர்த்து போராட முன்வரவேண்டும்.
வாருங்கள்.. போராடலாம்
நாளை உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கோ உங்கள் சகோதரிகளுக்கோ இதே நிலைமை ஏற்படலாம். வீதிக்கு வாருங்கள் போராடுவோம். இந்த அடிமை அரசு இருக்கின்ற வரையில், அடிமை அரசினை தூக்கி நிறுத்துகின்ற இந்த மத்திய அரசு இருக்கின்ற வரையில், இதுபோன்ற இளம்சிறார்களை சிதைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
முடிவு எடுங்கள்
குழந்தை தொழிலாளர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர்களே... இதுபோன்ற கயவர்களுக்காக நீங்கள் எப்போதுமே தயவுசெய்து வாதாடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். கதற கதற கற்பழித்தவர்களுக்காக வாதாட மாட்டோம் என்று அனைத்து வழக்கறிஞர்களும் முடிவு எடுங்கள்" என்றார் வேல்முருகன்!