வருமானத்திற்கே வழியில்லையாம்... வரியை குறைதென்ன பயன்... வேல்முருகன் விமர்சனம்
சென்னை: விலையேற்றம், வேலையின்மை, பணவீக்கம், பணப்புழக்கமின்மை ஆகியவற்றால் தேசமே தேய்ந்துவரும் நிலையில், பசப்பு வார்த்தைகளால் மத்திய அரசு அதனை மூடிமறைக்க முயற்சிப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
எப்படி நம்புவது?
இந்தியாவில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த 5 இடங்களில் உலகத் தரத்தில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்; இந்த 5 இடங்களில் தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் இடம்பெறும் என்கிறது பட்ஜெட். நாம் கேட்கிறோம். திருநெல்வேலி - திருவைகுண்டம் வழியில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களையெல்லாம் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றீர்களே, எங்கே அவை? இந்தக் கேள்விக்கு இதுவரை பதில் இல்லாததால், உண்மையான பொருளை அருங்காட்சியகத்தில் வைப்பீர்கள் என்று எப்படி நம்புவது?
சிதைக்கும் வேலை
கீழடியில் உலகிலேயே தொன்மையான பொருள்கள் கிடைத்ததும் அகழாய்வையே ஊத்தி மூடியவர்கள்தானே? இப்போது தமிழ்நாடு தொல்லியல் துறை அல்லவா கீழடி அகழாய்வை மேற்கொண்டிருக்கிறது! எங்கள் எம்பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் அதைப் பொருட்படுத்தாது ‘சிந்துவெளி நாகரிகம்' என்பதை ‘சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம்' என்று மீண்டும் மீண்டும் பட்ஜெட்டில் குறிப்பிட்டதென்ன? இப்படி வரலாற்றைத் திரிக்கும், சிதைக்கும் வேலை ஏன்? வர்ணாசிரம மனுஅதர்மம் தவிர, உருப்படியான எந்தக் கொள்கையும் இல்லாத வெற்றுவேட்டுதானே
என்ன பயன்?
‘வருமான வரிக் குறைப்பு' என்கிறது பட்ஜெட்! வருமானத்திற்கே வழி இல்லாதபோது வரியைக் குறைத்தென்ன, கூட்டியென்ன? புதிய வேலைவாய்ப்பிற்குத் திட்டமில்லை; இருக்கிற வேலையை இழப்பதையும் தடுக்க முடியவில்லை. மக்கள் தங்கள் பணத்தை சேமிப்பதற்கு கொடுக்கப்பட்டு வந்த சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளதால், நாட்டில் சமூகப் பாதுகாப்பே கேள்விக்குறி ஆகியிருப்பதுதான் உண்மை.
பொதுத்துறை
பொதுத்துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாக விற்றுக் கொண்டிருக்கிறது பாஜக அரசு. இப்போது நாட்டின் முதன்மையான, அதிமுக்கியமான பொதுத்துறை நிறுவனத்தையே விற்கப்போகிறது. இத்தனைக்கும் ஏற்கனவே எல்ஐசியிடமிருந்து சுமார் 20 லட்சம் கோடி அளவுக்கு கடன் பெற்றிருக்கிறது பாஜக அரசு. இப்போது விற்கப்போகிறது என்றால் அதன் கதையையே முடிக்கப்போகிறது என்பதைத் தவிர வேறென்ன பொருள்?
மறைக்க முயற்சி
விலையேற்றம், வேலையின்மை, பணவீக்கம், பணப்புழக்கமின்மை ஆகிய இவற்றால் தேசமே தேய்ந்துவரும் நிலையில், பசப்பு வார்த்தைகளால் பவ்வியமாக அதனை மூடிமறைக்கப் பார்க்கிறது மத்திய பட்ஜெட்.