தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு...பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?-வேல்முருகன் கேள்வி
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வினவியுள்ளார்.
மேலும், 13 அப்பாவி உயிர்களை பலி வாங்கிய கொலைக்குற்றவாளிகளை அடையாளப்படுத்தாமல் அவர்களை பாதுகாப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சிபிஐ விசாரணையில் காவல்துறையினர் பெயரைக் கூட முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யவில்லை என வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை அவர்களுக்கு உறுதுணையாக நிற்பேன் எனவும் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.
நீதி பதி அருணா ஜொகதீசன் ஆணையம் இரண்டு ஆண்டுகளாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த விசாரணை இன்னும் தொடருவதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார். மேலும், தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் குறித்து தானாக விசாரணையை தொடங்கி முடித்துக் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள்... நெஞ்சை விட்டு அகலவில்லை -கனிமொழி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு காலதாமதமின்றி நீதி கிடைத்திட வேண்டும் என்றும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீதிக்கான தனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.