செய்தியாளர் மோசஸ் கொலை... சமூக விரோதிகளுக்கு யார் கொடுக்கும் துணிச்சல்..? வேல்முருகன் பாய்ச்சல்..!
சென்னை: செய்தியாளர் மோசஸ் தனக்கு வந்த கொலை மிரட்டல் குறித்து போலீஸில் புகார் அளித்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வினவியுள்ளார்.
ஊடகத்துறையினர் கொலை செய்யப்படும் அளவுக்கு தமிழ்நாட்டில் நிலைமை மோசமாகியிருப்பது மிக மிக ஆபத்தான போக்கு என அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கஞ்சா வியாபாரம்
திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர் பகுதியின் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளராகப் பணியாற்றி வந்தவர் மோசஸ். இவர் இந்தப் பகுதியில் நடக்கும் சமூக விரோத, சட்ட விரோத சம்பவங்களை அம்பலப்படுத்தி செய்தியளித்து வந்தார். கஞ்சா விற்பனை கனஜோராக நடந்து கொண்டிருப்பதை மோசஸ் கண்டுபிடித்துள்ளார். அதனைச் செய்தியாக அளித்து அம்பலப்படுத்தியுள்ளார்.
போலீஸ் மெத்தனம்
அதன் காரணமாக சட்ட விரோத, சமூக விரோதக் குற்றவாளிகள் மோசஸ் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை எடுத்துச் சொல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார் மோசஸ். கொலை மிரட்டலால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை மோசஸ் போலீசிலும் புகார் செய்திருந்தார். ஆனால் போலீசின் அலட்சியம் கடைசியில் மோசஸின் கொலையில் போய் முடிந்துள்ளது.
யார் தந்த துணிச்சல்
ஆனால் அந்தப் புகார் தூங்கிக் கொண்டிருந்ததே தவிர, அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதை அறிந்துதான் அந்த சட்ட விரோத, சமூக விரோத குற்றவாளிகளுக்கு துணிச்சல் வந்திருக்க வேண்டும்; மோசஸைப் படுகொலை செய்து விட்டிருக்கின்றனர். முன்கூட்டிப் புகார் அளித்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளதைப் பார்க்கும்போது, அந்த சட்ட விரோத, சமூக விரோதக் குற்றவாளிகளுக்கும் போலீசுக்கும் தொடர்பு ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் இயல்பாகவே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
எச்சரிக்கை
எனவே தமிழக அரசு இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு காவல்துறையைச் சேர்ந்தவர்கள் யாரும் இதில் உடந்தையாகச் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். மேலும், ஊடகத் துறையினர் கொலை செய்யப்படும் அளவுக்கு தமிழ்நாட்டில் நிலைமை மோசமாகியிருப்பதையும் மோசஸின் படுகொலை சுட்டிக் காட்டுகிறது. இது மிக மிக ஆபத்தான சூழ்நிலையாகும்.