தமிழக மின்வாரியத்தில் தனியாரை அனுமதித்தது ஏன்...? வேல்முருகன் கடும் கண்டனம்..!
சென்னை: தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு கொடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
அரசின் தனியார்மய நடவடிக்கையால் இனி ஐடிஐ படித்த மண்ணின் மக்கள், நேரடியாக மின்வாரியத்தில் பணியில் சேர முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளதாக வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மக்கள் தலைவன்... ஓ.பன்னீர்செல்வத்தை புரோமோட் செய்வதற்கான ஏற்பாடுகள் ஜரூர்.. பின்னணியில் ஓ.பி.ஆர்..!
வேதனை
தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 12 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்காக ஒப்பந்தத்தை, தனியாருக்கு விட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழக மின்சார வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு விடும் போது, அந்நிறுவனமானது குறைந்த ஊதியத்தில் பணியாளர்களை நியமிக்கும். அதற்காக, அந்த தனியார் நிறுவனம் வடமாநிலத்தவர்களை அழைத்து வந்து, மின்சார வாரியத்தில் பணியில் நியமிக்கும்.
நடுத்தெருவில்
இதனால், ஐடிஐ படித்த மண்ணின் மக்களாகிய தமிழர்கள், நடுத்தெருவில் அனாதையாக நிற்கும் சூழல் ஏற்படும். ஏற்கனவே 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மண்ணின் மக்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தனியாருக்கு விடுவது, மண்ணின் மக்களின் நெஞ்சில் ஈட்டி பாய்ச்சுவது போன்றது.
9 ஆண்டுகால போராட்டம்
மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பு என்ற கோரிக்கையை முன் வைத்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்தின் வேலைவாய்ப்பு தமிழருக்கே என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, நீதிமன்றங்கள் மூலம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி பல்வேறு வழக்குகளை தொடுத்துள்ளது.
எடப்பாடி அரசு
ஒரு புறம் தமிழர்கள் மீது இனவெறி தாக்குதலை நடத்தி வரும் மோடி அரசு, மற்றொரு புறம் பொருளாதார தாக்குதலை நடத்தி வருகிறது. வடமாநிலத்தவர்களை அதிகப்படுத்துவதன் மூலம், தமிழகத்தில் காலூன்ற மோடி அரசு முடிவெடுத்துள்ளது. இது தமிழகத்தின் இளைஞர்களின் வேலை உரிமைப் பறிப்பு, வாழ்வுரிமைப் பறிப்பு மட்டுமல்ல, தொலைநோக்கில் தமிழர் தாயக உரிமையைப் பறிக்கும் இன ஒதுக்கல் கொள்கையாகும். இதனையெல்லாம் புரிந்து கொள்ளாத எடப்பாடி அரசு, மோடி அரசுக்கு கங்காணி வேலை பார்த்து வருகிறது.
போராட்டம்
எனவே, தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 12 ஆயிரம் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமனம் செய்யும் நடவடிக்கையை எடப்பாடி அரசு கைவிட வேண்டும். இந்த கோரிக்கைகளுக்கு எடப்பாடி அரசு செவி சாய்க்கவில்லை என்றால், மாணவர்களையும், இளைஞர்களையும் ஒன்று திரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை எடப்பாடி அரசுக்கு நினைவுப்படுத்துகிறேன்.