எல்லை மீறிச் செல்லும் எஸ்.பி.ஐ. வங்கி... இழிவுப்படுத்துவதை நிறுத்திக் கொள்க.. வேல்முருகன் எச்சரிக்கை
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் எஸ்.பி.ஐ. வங்கியில் கல்வி கடன், விவசாயக்கடன் செலுத்தாதவர்களின் புகைப்படம் பெரிதாக போடப்பட்டு பேனர் வைக்கப்பட்டுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் கடன் பெற்றுவிட்டு, அக்கடனை செலுத்தாத மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட சில கார்பரேட் நிறுவன முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு துணிச்சல் இல்லை என கடுகடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழக அரசுப்பணிகள் தமிழருக்கே... வேலைகிடைக்கும் என்று 90 லட்சம் பேர் காத்திருப்பு -வேல்முருகன்
அதிர்ச்சி
அரக்கோணம் எஸ்.பி.ஐ வங்கியில் கல்வி கடன், விவசாயக்கடன் செலுத்தாதவர்களின் புகைப்படம் பெரிதாக போடப்பட்டு பேனர் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அதில், நீங்களும் இடம் பெற வேண்டுமா என்று வாசகம் வேறு போடப்பட்டுள்ளது. கடன் வாங்கியவர்களில் உண்மையில் வேலை கிடைக்காமல் உள்ளவர்களும் இருக்கிறார்கள்.
சொகுசு வாழ்க்கை
கல்விக்கடன், விவசாயக்கடன் செலுத்தாதவர்களின் புகைப்படத்தை வங்கியின் முன்பாக வைப்பது எந்த விதத்தில் நியாயம். வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் கடன் பெற்றுவிட்டு, அக்கடனை செலுத்தாமல், மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட சில கார்பரேட் நிறுவன முதலாளிகள் வெளிநாடு தப்பிச்சென்று, அங்கு சொகுசு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது இதுவரை மத்திய அரசாலும், வங்கி நிர்வாகத்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விவசாயிகள் இலக்கு
ஆனால், கல்விக்கடன், விவசாயக்கடன் வாங்கியவர்களை மட்டுமே வங்கி நிர்வாகம் குறி வைத்து தாக்கி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், வங்கியில் வாங்கிய கடனுக்கு 2 தவணைகள் கட்டமுடியவில்லை. அவரையும், அவரது குடும்பத்தையும் இழிவுப்படுத்திய வங்கி அதிகாரிகள், அந்த விவசாயிடமிருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதனால் வேதனையடைந்த அந்த விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றது தமிழக மக்களுக்கு நினைவிருக்கும். ஒரு விவசாயி போதாத நேரம் காரணமாக, விவசாயம் பொய்த்துப் போய் வங்கி கடனை கட்ட முடியாமல் தவிக்கும் போது, அவர் வங்கி அதிகாரிகளால் வேட்டையாடப்படுவது வேதனைக்குரியது.
கோடிக்கணக்கில்
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதாகட்டும், விவசாயிகள் விவசாயக்கடன் பெறுவதாகட்டும், அவர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை விதிக்கும் வங்கி நிர்வாகம், அதே கார்பரேட் நிறுவன முதலாளிகளை கண்டால், எவ்வித கேள்விகளை கேட்காமல் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி தருவது வாடிக்கையாக உள்ளது. வங்கியின் முன்பாக கல்விக்கடன் பெற்ற மாணவர்களின் புகைப்படத்தையும், விவசாயிகளின் புகைப்படத்தையும் வைத்து அவமானப்படுத்தி வரும் வங்கி நிர்வாகங்கள், மல்லையா, நிரவ் மோடியின் புகைப்படத்தை பேனராக வைத்துள்ளதா?
கால அவகாசம் தருக
எனவே கல்விக்கடன், விவசாயக்கடன் பெற்றவர்களின் புகைப்படத்தை வங்கியின் முன்பாக வைத்து இழிவுப்படுத்துவதை விட்டு விட்டு, மாணவர்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க வங்கி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்து கடனை வசூலிக்க தேவையான கால அவகாசம் அளிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.