வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள்... தாயகம் அழைத்து வரக்கோரி வேல்முருகன் போராட்டம்
சென்னை: வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்து வரக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவரவர் வீடுகளுக்கு முன்பாக நின்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கைகள் வைத்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதேபோல் வேல்முருகனின் வேண்டுகோளை ஏற்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ தனது இல்லத்தின் முன்பு பதாகை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார்.
ஒரே சின்னம்தான்.. கூட்டணி கட்சிகளுக்கு ஆர்டர் போடும் ஸ்டாலின்.. மதிமுக, விசிக, இடதுசாரிகள் அதிர்ச்சி
தவிக்கும் தமிழர்கள்
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் உலகின் பல நாடுகளிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பின்றி, வருவாயின்றி அங்கு பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை மீட்டு தாயகம் அழைத்து வரக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பதாகைகள் ஏந்தி அவரவர் வீடுகளுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள தனது இல்லத்தின் அருகே வேல்முருகன் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.
தமிழர்கள் மீட்பு
வெளிநாடுகளில் சிக்கி தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்களை மீட்க தனி நல வாரியம் அமைக்க வேண்டும், மீட்பு விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினருடன் இணைந்து வெளிநாடு வாழ் தமிழர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
வைகோ பங்கேற்பு
இதேபோல் வேல்முருகன் அழைப்பை ஏற்று இந்த போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். சென்னை அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்தின் முன்பு பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, வெளிநாடு வாழ் தமிழர்கள் மீது மத்திய மாநில அரசுகள் கவனம் கொள்ள வேண்டும் என்றும், மீட்பு நடவடிக்கைகளில் வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரமாக செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
#bringbacktamils
மேலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் bring back tamils என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டெங் செய்து வருகின்றனர். வெளிநாடு வாழ் தமிழர்களின் குடும்ப சூழலையும், பொருளாதார நிலையையும் உணர்ந்து இக்கட்டான தருணத்தில் அவர்களுக்கு கை கொடுத்து உதவ வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என வேல்முருகன் கூறியுள்ளார். இதனிடையே இதே கோரிக்கைகளை முன்வைத்து கடந்தமாதம் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.