கடலூரை இயற்கைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேல்முருகன் கோரிக்கை
சென்னை: கடலூர் மாவட்டத்தை இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்! என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால், தமிழகமே கடும் பாதிக்குப்புக்குள்ளானது. குறிப்பாக, கடலூர், அரியலூர், செங்கல்பட்டு உட்பட 18 மாவட்டங்களில், பல லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின. பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ள நீரில் மிதந்தன. சிலர் உயிரிழந்தனர். ஆடு, மாடு என நூற்றுக்கணக்கான கால்நடைகள் பலியாகின.
மழையால் வீட்டின் மீது இடிந்து விழுந்த பள்ளியின் சுற்று சுவர்... நேர்ந்த சோகம்!
விவசாயிகள்
குறிப்பாக கடலூர் மாவட்டத்தில், சுமார் 1¼ லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதுதவிர வாழை, முந்திரி, காய்கறி உள்ளிட்ட பயிர்களும் பாதிப்படைந்தது. இதனால் விவசாயிகள் நிலைகுலைந்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் மழை நீரில் முழ்கின.
முதல்வர் ஆய்வு
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வு என்பது வெறும் கண்துடைப்பாக இல்லாமல், பாதிப்பில் இருந்து விவசாயிகளையும், மக்களையும் மீட்டெடுக்கும் வகையில் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகையை உடனடியாக வழங்க எடப்பாடி அரசு முன் வரவேண்டும்.
நிதி ஒதுக்கீடு
கடந்த 2018 -ஆம் ஆண்டு கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது வரை தொடர்கிறது. எனவே நிவாரணத்தொகை வழங்குவதில் எடப்பாடி அரசு மெத்தனம் போக்கு காட்டாமல், கடலூர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நிவாரணத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயப்பணிகளை மீண்டும் மேற்கொள்ளவதற்கான ஏற்பாட்டை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும். முக்கியமாக, கடலூர் மாவட்டத்தை இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவித்து, நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவேண்டும்.
வெள்ளம்
தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கவும், இம்முறையாவது தேவையான நிதியை பெற மத்திய அரசுக்கு எடப்பாடி அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
நடவடிக்கை
ஒவ்வொரு ஆண்டும் இயற்கைச் சீற்றம் மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தை, இயற்கை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவித்து,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.