கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் விவசாயிகளை... கைவிட்டு விடாதீர்... அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை..!
சென்னை: அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை மழைக்கு பறிகொடுத்துவிட்டு கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் விவசாயிகளை அரசு கைவிட்டுவிடக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை எல்லாம் மிகச்சரியாக கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பாமக நிறுவனர் ராமதாஸின் உடன் பிறந்த தம்பி சீனிவாசன் காலமானார்..!
டெல்டா மாவட்டங்கள்
டெல்டா மாவட்டங்களில் அறுவடை பருவத்தில் இருந்த சம்பா கதிர்கள், கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளத்தில் மூழ்கி அழுகிப் போய் விட்டன. ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கரில் அல்ல.- சுமார் 6 லட்சம் ஏக்கரில் இந்த பேரழிவு நிகழ்ந்துள்ளது. இதனால் கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களின் விவசாயிகள் கையில் இருந்ததையும் இழந்து செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
சம்பா கதிர்கள்
குறிப்பாக கடை பகுதிகளான பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் வயல் வெளி முழுமையும் கடல் போல் மாறிப்போனது. இந்த மாவட்டத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரில் சம்பா கதிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி விட்டன. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா கதிர்கள் அழுகிப்போனதால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பாதிப்பு விவரம்
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நிலத்தில் அறுவடைக்கு காத்திருந்த கதிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகிப் போயின. கடலூர் மாவட்டத்தையும் மழையும் வெள்ளமும் விட்டு வைக்கவில்லை. இம்மாவட்டத்தில் உள்ள காவிரி கடைமடை பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கரிலும் விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரிலுமாக 60 ஆயிரம் ஏக்கரில் கதிர் சேதம் ஏற்பட்டுள்ளது.
இழப்பீடு வழங்குக
இதேபோல் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழையால் பலத்த பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பாதிப்புகளை எல்லாம் மிகச்சரியாக கணக்கெடுத்து, கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் விவசாயிகளுக்கு கட்சி வேறுபாடின்றி, குறைந்தபட்சம் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
வேல்முருகன் கோரிக்கை
மேலும் 2018 ஆம் ஆண்டு முதல் சரிவர பயிர்க் காப்பீடு வழங்கப்படவில்லை. காப்பீடு வழங்குவதில் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என பேதம் பார்க்கப்படுவது வேதனையிலும் வேதனை. எனவே அனைவருக்கும் காப்பீட்டுத் தொகை கிடைக்கச் செய்வதோடு, வேளாண் பணிகளைத் தொடர ஏதுவாக விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் புதிய கடன்களை வழங்குவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.