வரவுக்கும் செலவுக்குமே போதவில்லை... நெல் விவசாயிகள் குமுறல்... வேல்முருகன் ஆதரவு குரல்
சென்னை: நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,000 வழங்க வேண்டும் என அவர் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கோடிக்கணக்கில் குவியும் முதலீடுகள்.. இந்தியாவின் "சிலிகான் வேலி" ஆக உருவெடுக்கும் தமிழகம்.. டிவிஸ்ட்
முக்கியப் பயிர்
தமிழ்நாட்டின் முக்கிய உணவுப்பொருள் அரிசி. அதனால் தமிழ்நாட்டின் முக்கிய விவசாயமே நெல் சாகுபடிதான். ஆனால் இந்த நெல் சாகுபடிக்கு தொடர்ந்து தடைகள். அதாவது மேட்டூர் அணையிலிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீர் முறையாகக் கிடைக்காதது மட்டுமல்ல; நெல்லுக்கு உரிய விலையும் கிடைப்பதில்லை. இதனால் நெல் சாகுபடியாளர்கள் வாங்கிய கடனையும் அடைக்க முடியாத நிலை. இதன் காரணமாக தற்கொலைச் சாவுகளும் நடக்கும் நிலை. ஆண்டுதோறும் இப்படியான அவல நிலையைத்தான் காண்கிறோம்.
போதிய விலை இல்லை
இந்த ஆண்டும் அதற்கு விலக்கில்லை. நெல் அறுவடையாகும் இந்தப் பருவத்தில் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளை விட்டு அதனை விற்க முடியாத நிலையையும் பார்க்க முடிகிறது. எல்லாவற்றையும் விட அதிர்ச்சி என்னவென்றால், அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல்லுக்கு போதிய விலை இல்லை.
குவிண்டால் ஒன்றுக்கு
தமிழக அரசு குவிண்டால் நெல்லுக்கு ஆதரவு விலையாக, சன்ன ரகம் ரூ.70; பொது ரகம் ரூ.50 என உயர்த்தி அறிவித்துள்ளது. ஒன்றிய அரசு சன்ன ரகம், பொது ரகம் இரண்டுக்குமே தலா ரூ.65 ஊக்கத் தொகை அறிவித்தது. இதன்படி குவிண்டால் சன்ன ரகம் ரூ.1905; பொது ரகம் ரூ.1865. இந்தப் புதிய கொள்முதல் விலை 2019 அக்டோபர் 1ந் தேதி முதல் 2020 செப்டம்பர் வரை நடைமுறையில் இருக்கும். அரசுகளின் இந்த விலை அறிவிப்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் குமுறல்
விவசாயத் தொழிலாளர்களின் கூலி, டீசல் விலை, எந்திரங்களின் வாடகை, டிஏபி உரத்தின் விலையேற்றம், யூரியா தட்டுப்பாடு, தண்ணீர்த் தட்டுப்பாடு ஆகியவற்றை ஒன்றிய, தமிழக அரசுகள் கருத்தில் கொள்ளவில்லை எனக் குமுறுகின்றனர் விவசாயிகள். பொன்னி அரிசி கிலோ ரூ.50க்கு மேல் விற்பனையாகிறது. இதன்படி பார்த்தால் ஒரு கிலோ நெல் ரூ.25 என அரசு நிர்ணயிக்க வேண்டும். ஆனால் ரூ.19தான் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
வேல்முருகன் பட்டியல்
மேற்கண்ட செலவு தவிர, நடவில் இருந்து 3 மாதங்கள் வரை நீர் பாய்ச்சுவது, எலித் தொல்லையைக் கட்டுப்படுத்துவது, வரப்பில் புல்லறுப்பது என நாளொன்றுக்கு ரூ.100 வீதம் மொத்தம் ரூ.9000 கூலியாகிறது. சாகுபடிச் செலவு ரூ.24,625; கூலி ரூ.9000; ஆக ரூ.33,625 ஆகிறது. தமிழக அரசோ, ஒரு கிலோ நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.27.50தான் ஆகும் என்கிறது. அப்படியென்றால், கர்நாடக, கேரள, ஆந்திர அரசுகள் நெல்லுக்கான ஊக்கத் தொகையை தமிழக அரசை விடவும் மிகக் கூடுதலாக உயர்த்தி வழங்குவது எப்படி என்று கேட்கிறார்கள் விவசாயிகள்.இவ்வளவு செலவுகள் செய்தும், ஒரு ஏக்கரில் 25 அல்லது 30 மூட்டை நெல்தான் கிடைக்கும்.
நிறைவேற்றுக
வேளாண் அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கை, உற்பத்திச் செலவை விட 50 விழுக்காடு கூடுதலாக வழங்க வேண்டும் என்று சொல்கிறது. இதைக் கருத்திற்கொண்டு நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.3000 வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை. அதை நிறைவேற்ற வேண்டுகிறோம்.வேளாண் அறிஞர் பரிந்துரைப்படி, உற்பத்திச் செலவை விட 50% கூடுதல் விலை இல்லை; நெல் கொள்முதல் நிலையங்களும் இல்லை! இதனால் அறுவடையான நெல்லுக்கு விலையில் இழப்பும், மழையில் நனைந்து சேதமும் ஏற்படுகிறது! எனவே உடனடியாகக் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும்; நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.3000 வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!