பாமகவுக்கு வர வேல்முருகன் ரெடி.. ஆனால்.. பரபரக்கும் பேக்கிரவுண்ட் நிகழ்வுகள்!
சென்னை: பாமகவிலிருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரும் வேலைகள் பாமகவில் வேகம் பிடித்துள்ளன. தீரனைத் தொடர்ந்து மேலும் பலர் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
திமுக, அதிமுக தவிர்த்து, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரு கட்சிகள், தாக்கத்தை ஏற்படுத்திய இரு கட்சிகள் என்றால் அது பாமக மற்றும் தேமுதிகதான். இரண்டு கட்சிகளுமே தாறுமாறான மக்கள் செல்வாக்கையும், பட்டாஸ் கிளப்பிய தளபதிகளையும் பெற்ற தெறியான அரசியல் கட்சிகள்.
ஆனால், தேர்தல் அரசியலில் பெரும் தோல்விகளை இவ்விரண்டு கட்சிகளுமே சந்தித்து வருகின்றன. இதில் பாமக பரவாயில்லை. தேமுதிக நிலைதான் படு மோசம் என்பதிலிருந்து ரொம்ப ரொம்ப மோசம் என்ற நிலைக்குப் போய்க் கொண்டுள்ளது.
திடீரென சென்னைக்கு வந்த அமித் ஷா.. இரவோடு இரவாக சந்தித்த முதல்வர்.. 15 நிமிடம் ஆலோசனை
ராமதாஸ் மும்முரம்
அதேவேளையில் இந்த இரண்டின் தலைமைகளில், ‘கட்சியை மீட்டெடுக்கணும்' எனும் எண்ணம் இருப்பது டாக்டர் ராமதாஸுக்கு மட்டுமே. அவர் தனது கட்சியை பலப்படுத்த மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அன்புமணி ராமதாஸுக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்ததன் மூலம் அதில் முதல் படியைத் தாண்டியுள்ளது பாமக.
சீரமைப்பதில் தீவிரம்
அடுத்த கட்டமாக கட்சியை சீரமைக்கும் வேலைகள் தொடங்கியுள்ளன. பா.ம.க.வை மறு சீரமைக்கும் முயற்சியில் ஒன்றாக, அதிலிருந்து கழன்று சென்ற முன்னாள் தெறி நிர்வாகிகளை மீண்டும் பா.ம.க.வுக்குள் அழைத்துக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். அதுவும் எந்த ஈகோவும் பார்க்காமல் தானே போன் போட்டு அழைக்கிறார்.
வேல்முருகன் வருவாரா
அந்த வகையில் பேராசிரியர் தீரனை அழைத்து, கன்வின்ஸ் செய்து, இணைத்துக் கொண்டவர் இப்போது அடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பக்கம் பார்வை திரும்பியிருப்பதாக சொல்கிறார்கள். இந்த ப்ராஜெட்டுக்கான முதல் ரவுண்ட் வேலைகள் முடிந்துவிட்டனவாம். இது பற்றி வேல்முருகனிடம் பேசியபோது, இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை என்றார்.
பாமகவுக்குச் சமம்
தொடர்ந்து அவர் கூறுகையில், இப்போது நானும் பா.ம.க.வுக்கு நிகராக அமைப்பு வைத்துள்ளேன் (த.வா.க). அதனால் இப்போதைக்கு பா.ம.க.வில் சேரும் எண்ணம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் எப்படி என தெரியவில்லை. அந்த கட்சியில் நானும், காடுவெட்டி குருவும் இருந்த இடம் இன்று வரையில் காலியாகத்தான் இருக்கிறது. இப்போது அங்கு ராமதாஸ் மட்டுமே இருக்கிறார்.
என்ன வேண்டும்னாலும் நடக்கலாம்
எதிகாலத்தில் பா.ம.க.வினரும், எங்கள் கட்சியினரும் விரும்பினால் இணைப்பை நடத்தி, தலைமை தாங்குவேன் என்று ஒரே போட்டாக போட்டார் வேல்முருகன். இது பாமக தரப்புக்கு பெரும் கோபத்தைக் கொடுத்துள்ளதாம். இருப்பினும் அடுத்தடுத்து பேச்சுக்கள் தொடரும் என்று தெரிகிறது. பார்க்கலாம்.. வேல்முருகன் மீண்டும் பாமகவின் படைத் தளபதியாக உருவெடுப்பாரா என்று.
- ஜி.தாமிரா