தமிழக வேலை தமிழருக்கே... வேலை உறுதிச்சட்டம் இயற்ற வேண்டும் -வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை: தமிழக வேலை தமிழருக்கே என்ற வேலை உறுதிச்சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
வடநாட்டவர்களின் வேட்டைக்காடாக தமிழகம் மாறி வருகிறது என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக வேலை தமிழருக்கே என்ற முழக்கத்தை முன் வைத்து வேல்முருகன் தொடங்கியுள்ள இந்தப் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பாஜகவைவிட அதிமுக வீக்காவா இருக்கு.. திடீருன்னு இப்படி சொல்லிட்டாரே வி.பி.துரைசாமி.. என்ன லாஜிக்?
தமிழக இளைஞர்கள்
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் வடநாட்டவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக கூறும் வேல்முருகன், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வேலை உறுதிச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என போர்க்குரல் எழுப்பியுள்ளார். தமிழர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோவதை தடுக்கும் நோக்கில் இந்தச் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
540 பேரில் 15 பேர்
அண்மையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு ரயில்வே ரெக்ரியூட்மெண்ட் போர்டு மூலம் நடத்தப்பட்ட தேர்வில் 540 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதில் 15 பேர் மட்டுமே தமிழர்கள் இடம்பெற்றிருந்தனர். இதையடுத்து அதில் பெரியளவில் முறைகேடுகள் நிகழ்ந்து தமிழர்களின் வேலைவாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய வேல்முருகன், பணி ஆணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வேட்டைக்காடு
தமிழகம் வடநாட்டவர்களின் வேட்டைக்காடாக மாறிவருவதாகவும், இந்த நிலையை மாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் அந்தப் பணிக்கு நிரப்பப்படுவதாக வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விழித்துக் கொள்க
தமிழர்கள் மத்தியில் வேலைவாய்ப்புகள் பறிபோவது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் வடமாநிலத்தவர்கள் தொடர்ந்து மிதித்து வருவதாகவும், இனியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதனை வேடிக்கை பார்க்காது எனவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழக வேலை தமிழருக்கே என்பதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.