எத்தனை காலத்துக்குத்தான் இப்படி வெட்டி கொண்டே இருப்போம்.. சமாதானமாகுங்களேன்.. கண்கலங்கிய வேல்முருகன்
சாதி சண்டை இனி நமக்குள் வேண்டாம் என வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: "இன்னும் எத்தனை காலத்துக்குதான் நாம் சாதி சண்டை, மத சண்டை போட்டு கொண்டு, வெட்டிக் கொண்டு இருப்பது? தலித்தோ, வன்னியரோ.. சின்ன பிரச்சனையா இருந்தாலும் உட்கார்ந்து பேசி தீர்த்துவிட வேண்டும்.. இரு சமுதாய பெரியவர்களிடம் பேசி சாதி சண்டை வராதவாறு செயல்பட வேண்டும்" என்று வேல்முருகன் கண்கலங்கியவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் முடிந்ததையடுத்து, திமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஸ்டாலினை ஒவ்வொருவராக சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வேல்முருகன் பேசும்போது, சாதிச் சண்டைகளில் வன்னிய இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை தொலைத்துவிட்டனர் என்று சொல்லி கண்கலங்கினார். அப்போது வேல்முருகன் சொன்னதாவது:
தலித் மக்கள்
"பொன்பரப்பி சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தலித், வன்னிய சமுதாய மக்கள் என இரு தரப்பிலும் பிரச்சினைக்குக் காரணமானவர்கள் யாரோ அவர்களை காவல் துறையினர் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். எங்கேயோ ஒரு சம்பவம் நடந்ததற்காக அப்பாவி தலித் மக்களின் வீடுகள் தாக்கப்படுவதும், அப்பாவி வயதான பெண்களை தாக்குவதும் கண்டனத்துக்குரியது.
புகார்
ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவியுங்கள் அல்லது இரு சமுதாயத்தின் பெரியவர்களிடம் பேசி சாதிச் சண்டை வராத அளவு செயல்படுங்கள். தலித்துகள் அதிகமாக உள்ள இடங்களில் வன்னியர்களை தாக்குவதும், வன்னியர்கள் அதிகமாக உள்ள இடங்களில் தலித்துகள் வன்னியர்களை தாக்குவதும் கூடாது.
சாதி சண்டை
சிறு பிரச்சனை என்றாலும் உட்கார்ந்து பேசி தீர்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால், பிழைக்க வந்த வடநாட்டுக்காரர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு நம்மை இங்கு தாக்குகிறார்கள். நம் வேலைவாய்ப்பை பறிக்கிறார்கள். அதனால் இவர்களிடமிருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டுமே தவிர, இன்னும் எத்தனை காலத்துக்குதான் நாம் சாதி சண்டை, மத சண்டை போட்டு கொண்டு, வெட்டிக் கொண்டு இருப்பது?
உணர்ச்சிகள்
வெறும் முக நூல்களிலோ, ட்விட்டர்களிலோ வெறும் உணர்ச்சியை தூண்டக்கூடிய வீடியோ பதிவுகளை இரு தரப்புமே இட வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கறேன். நீங்கள் தூண்டும் இந்த உணர்ச்சிகள், நாளை இளைய தலைமுறைக்கு பெரிய பாதிப்பை தந்துவிடும்.
பாஸ்போர்ட்
சாதிச் சண்டைகளில் ஈடுபட்டதால் வழக்குப் பதியப்பட்டதன் விளைவு நிறைய இருக்கிறது. தலித்தோ, வன்னியரோ.. எந்த இளைஞனாக இருந்தாலும் சரி, ஒரு பாஸ்போர்ட் எடுக்க முடியல, டிஎன்பிசி தேர்வு எழுத முடியறது இல்லை, ஒரு சாதாரண பியூன் வேலைக்கு போக முடியல.. ஆர்ஆர்பி தேர்வு எழுத முடியல.. மத்திய அரசின் பல உயர்பதவி வேலைக்கு போக முடியல.
தமிழ்சமூகம்
அதைப்பத்தி கேட்டால், உன் மேல் எஸ்சிஎஸ்டி வழக்கு இருக்கு, உன் மேல வீடு கொளுத்தின வழக்கு இருக்குன்னு சொல்லிடறாங்க. அதனால நம்மை ஆள துடிப்பவர்களின் சதியை புரிந்து கொள்ளணும். இந்த சதியில் இருந்து நாம விடுபட்டு, தெளிந்த பார்வையுடன், ஒரு தமிழ்ச்சமூகம் உருவாக வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்" என்றார்.