மோடி அரசின் மோசடி பட்ஜெட்.. பொதுத் துறையை தாரை வார்ப்பதுதான் சுய சார்பு இந்தியாவா?.. வேல்முருகன்
சென்னை: தனியார் நிறுவனங்களுக்கு பொதுத் துறையை தாரை வார்ப்பதுதான் மத்திய அரசின் சுயசார்பு இந்தியாவா என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன். அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2021 - 22-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை என்பது, கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டதாகும். சுயசார்பு இந்தியா என்ற வெற்று முழக்கத்துடன், கார்ப்பரேட்டுகளின் முழு கைக்கூலியாகவும், கார்ப்பரேட்டுகளின் முழு வடிவமாகவும் மாறி நிற்கிறது மோடி அரசு.
பழைய வாகனங்களை அகற்றிவிட்டு புதிய வாகனங்கள் வாங்கும் கொள்கைக்கு நிதின் கட்கரி வரவேற்பு
ஏர் இந்தியா
பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்குத் விடுவது, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 விழுக்காடாக அதிகரித்திருப்பது, பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பது போன்ற படுபாதக செயல்களை கொஞ்சம் கூட தயக்கமில்லாமல், அறிவித்திருப்பது பாசிசத்தின் உச்சமாகும். இதை விட வெட்கக்கேடானது என்னவாக இருக்க முடியும்.
போராட்டம்
சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக விவசாயிகளும், இளைஞர்களும், அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், இந்த ஆண்டே அத்திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று பட்ஜெட்டில் அறிவித்திருப்பது, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் இழிவுப்படுத்தும் செயலாகும்.
இலவச மின்சாரம்
மின்பகிர்மானத்தைத் தனியாருக்கு தாரை வார்ப்பது மூலமாக, விவசாயத்திற்கான இலவச மின்சாரம், வீட்டு மின் கட்டணத்தில் ஏழே, எளிய மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பறிக்கப்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் என்பது நாட்டின் வளர்ச்சிக்கானது அல்ல, நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை, இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் பட்ஜெட்டாகும்.
நியாயம்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் இரவு, பகல் பாராமல் போராடி வருகின்ற விவசாயிகளுக்கு ஆதரவாக எந்த அறிவிப்பும் இல்லாதது, மத்திய பாஜக அரசு, விவசாயிகளுக்கு விரோதமானது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலில் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியகி இருக்கும் நிலையில்,பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50ம், டீசலுக்கு ரூ.4-ம் கூடுதல் வரி விதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என்பது புரியவில்லை.
அழிவின் விளிம்பு
கொரோனா ஊரடங்கு காலத்தில் அழிவின் விளிம்பில் இருக்கக் கூடிய சிறு, குறு , நடுத்தர தொழில்கள், அவற்றில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஏழை, எளியவர்களின் வாழ்வாதாரத்தை கடுகளவுக்கூட பாசிச மோடி அரசு நினைத்து பார்க்கவில்லை என்பது கவலைக்குரியது. தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவோம் என்ற பாசிச அரசின் ஆணவப்பேச்சு, பட்ஜெட்டில் எதிரொலிக்கிறது. குறிப்பாக, மோடி அரசின் பட்ஜெட், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நாட்டின் அனைத்து வளங்களின் கதவுகளின் திறந்து விடும் வகையில் அமைந்துள்ளது என்றார்.