உரிமைகளுக்காக போராடும் விவசாயிகள் மீது கை வைக்காதீர்கள்... மத்திய அரசுக்கு வேல்முருகன் எச்சரிக்கை..!
சென்னை: புதிய விவசாய சட்டங்களை கண்டித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வு கண்டனத்திற்குறியது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ஹரியானா-பஞ்சாப் மாநில விவசாயிகளின் மாபெரும் போராட்டத்தை போல் அண்மைக்காலத்தில் இந்தியா வேறு எந்தப் போராட்டத்தையும் கண்டதில்லை எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
விவசாயிகள் போராட்டம்
புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து இன்று நான்காவது நாளாக பஞ்சாப்-அரியானா விவசாயிகளின் ‘டெல்லி சலோ' பேரணி டெல்லிக்கு வந்தடைந்திருக்கிறது. வழியெங்கும் விவசாயிகள் மீது தடியடி, தண்ணீர் பீய்ச்சியடிப்பு, கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு எனக் கடுமையான போலீஸ் தாக்குதல்கள். அத்தனையையும் மீறித்தான் டெல்லியை அடைந்துள்ளனர் விவசாயிகள்.
தீவிர போராட்டம்
ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களுடன் பஞ்சாப் விவசாயிகள் டெல்லி கிளம்பியுள்ளதால், நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். குருகிராம்-டெல்லி எல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உள்ளூர் கல்லூரிகளின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்ததால் புராரியில் உள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் விவசாயிகள் அமைதிப் போராட்டம் நடத்திக்கொள்ள டெல்லி போலீசார் அனுமதித்துள்ளனர்.
எதிர்கொண்டு
அண்மைக் காலத்தில் இப்படிப்பட்ட மாபெரும் போராட்டத்தை இந்தியா கண்டதில்லை; அந்த அளவுக்குப் போராட்டக்காரர்களின் அபரிமிதமான எண்ணிக்கை. அதோடு போலீசின் மோசமான அடக்குமுறையை எதிர்கொண்டு முறியடித்து டெல்லிக்குள் நுழைந்த தீவிரம். மோடியின் இதயத் துடிப்பும் நாடித் துடிப்பும் எந்த அளவுக்கு எகிறியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
டெல்லி சலோ
விவசாய நிலம் கார்ப்பொரேட்டுகளால் கைப்பற்றப்பட்டு, அந்தத் தன் நிலத்திலேயே விவசாயி கூலியாகும் நிலை. விவசாயிகளையே ஒழித்துக்கட்டும் விவசாயச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா விவசாயிகளின் ‘டெல்லி சலோ' பேரணி. இந்தப் பேரணியை தடியடி, தண்ணீர் பீய்ச்சியடிப்பு, கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு எனக் கடுமையாகத் தாக்கிய போலீஸ் வன்முறையை வன்மையாகக் கண்டிப்பதுடன், விவசாயிகள் எதிர்க்கும் சட்டங்களை வாபஸ் வாங்குமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.