மத்திய அரசின் செயல்பாடுகளை ஒப்புக்கு மட்டுமே எதிர்க்கிறார் முதல்வர்... வேல்முருகன் குற்றச்சாட்டு
சென்னை: மத்திய அரசின் செயல்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கு எதிர்த்துப் பேசுகிறாரே தவிர, அவை நடைமுறைக்கு வந்துவிடாமல் தடுப்பதில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், போராடி பெற்ற இட ஒதுக்கீடுகளை காலி செய்வதே பிரதமர் மோடியின் முழுநேரப் பணியாக இருக்கிறது என விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை முழுமையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்க சீமான் வலியுறுத்தல்
தடுப்பதில்லை
பிரதமர் மோடியின் செயல்களை முதல்வர் பழனிசாமி ஒப்புக்கு எதிர்த்துப் பேசுகிறாரே தவிர, அவை நடைமுறைக்கு வந்துவிடாமல் தடுப்பதில்லை. இதிலிருந்து, இந்தியாவை பின்னோக்கிச் செலுத்தும் மோடியின் செயல்களை பழனிசாமியும் ஏற்றுக்கொள்கிறார் என்பதே உண்மை. ஈழவா மற்றும் திய்யா மலையாள இன மக்களைத் தமிழர்களாகக் குறிப்பிட்டு, BC பட்டியலில் சேர்த்திருப்பதாக வலிந்துபோய் அம்மக்களிடம் அதற்கான சான்றை வழங்கியிருக்கிறார் பழனிசாமி.
இது அம்மா ஆட்சி
மூச்சுக்கு மூச்சு இது அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்று சொல்லும் பழனிசாமி, அந்த அம்மா செய்யாத, அவருக்குத் தலைவரான எம்ஜிஆர் செய்யாத, அவருக்கும் தலைவரான, கட்சியின் பெயரிலும் கொடியிலும் பதித்துள்ள அறிஞர் அண்ணாவே செய்யாத செயல் அல்லவா இது.
தமிழ் பேசுவதில்லை
கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில் ரப்பர் தோட்டத் தொழிலுக்காக கொடைக்கானல் கூடலூர் நீலகிரி கோத்தகிரி குன்னூர் மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் கேரளா போன்ற பகுதிகளிலிருந்து அழைத்துவரப்படுகின்றனர். அதுபோல் செங்கோட்டை தாலுகாவில் கேரள எல்லையோரத்திலும் நீண்ட காலமாக வந்து தொழில் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் யாரும் தமிழ் பேசுவதில்லை; அவர்களின் தாய்மொழியான மலையாளத்தில்தான் பேசுகின்றனர்.
வலியப்போய்
இவர்களைப் பற்றிய எந்த விவரமும் பழனிசாமிக்கும், ஏன், மோடிக்கே கூட தெரியாது என்று அடித்துச் சொல்ல முடியும். அப்படியிருக்க, வலிந்துபோய் இவர்கள் தமிழர்கள் என்றும் BCக்கள் என்றும் சான்றிதழ் வழங்குவது எந்த வகையில் நியாயம்? தற்பொழுது மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட ஈழுவா சாதியினரும் தமிழக வேலைவாய்ப்பு மூலம் இனி அதிகார உச்சத்தில் தொடர்வார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திரும்பப்பெறுக
ஓட்டுக்காக அவர் மலையாள ஈழவா, திய்யா ஜாதிகளை தமிழ் ஜாதிகளாக்கி, வலிந்துபோய் BC சான்றிதழ் வழங்கியதை வன்மையாகக் கண்டிப்பதோடு, அதை அவர் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! தமிழகத்தில் வசிக்கக்கூடிய மலையாள மொழியை தாய்மொழியாக கொண்ட 10 லட்சம் ஈழுவா சாதியினர் தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்க முயற்சி செய்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே தமிழக முதல்வர் இந்த அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!