தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் 'இந்திக்காரர்கள்'... போர்க்கொடி உயர்த்தும் வேல்முருகன்
சென்னை: தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு தட்டி பறிக்கப்பட்டு வட இந்தியர்களுக்கு தாரை வார்க்கப்படுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்திக்காரர்களை தமிழகத்தில் திணிக்கும் போக்கை கண்டித்து வரும் 16-ம் தேதி சமூகஇடைவெளியுடன் கூடிய போராட்டம் நடத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
விநாயகர் சதுர்த்தி விழா: தடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடையா... அனுமதி கொடுங்க - எல்.முருகன்
போட்டித் தேர்வு
ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் அஞ்சல்துறைப் பணிக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது. அதில் தமிழ்ப் பாடத்தில், தமிழே தெரியாத ஹரியானாவைச் சேர்ந்த மாணவர்கள் 96% மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தனர். இது, தமிழ்நாட்டு அஞ்சல் பணியில் சேர திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஓர் முன்னேற்பாடன்றி வேறெதுவாக இருக்க முடியும்?
வட மாநிலங்கள்
தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசுப் பணிகளில் சேர, தேர்வெழுதும் 99% தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. ஆனால் டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய இந்த 4 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் தேர்வில் அதிகளவில் வெற்றி பெற்று தமிழ்நாடு உள்பட இந்தியா முழுக்க ஒன்றிய அரசுப் பணிகளில் அமர்கிறார்கள்.
வட இந்தியர்
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழில் பழகுநர் இடங்களுக்கு 1,765 பேர் தேர்வு செய்யப்பட்டதில் 1,600 பேர் வட இந்தியர். தவிர, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்எல்சி, பாரத மிகுமின் நிறுவனம், வங்கிகள், வருமானவரித்துறை, சுங்க இலாகா போன்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம்.
டிராக்மேன்
தமிழ் நாளிதழை நம்பி, அத்தாட்சி பெறாமல் விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டரை லட்சம் பேரின் விண்ணப்பங்கள் தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டன. ஆனால் பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து விண்ணப்பித்தவர்களுக்குத் தேர்வு நடத்தி டிராக் மேன், போர்ட் மேன், சபாய் வாலா, கலாசி போன்ற பணிகளில் சேர்க்கப்பட்டனர்.
முன்னுரிமை
ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்பில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தனிச் சட்டமே இயற்றியுள்ளன. ஆனால் தமிழகத்தில் அப்படி இயற்றப்படவில்லை.
தமிழில் நடத்துக
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுத முடியும். இது இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு நல்வாய்ப்பாகவும் தமிழர் உள்ளிட்ட தென்னிந்தியர்களுக்கு கெடுவாய்ப்பாகவும் ஆகிவிடுகிறது.எனவே தமிழ்நாட்டில் தமிழக அரசுச் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளைப் போல, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வுகளையும் தமிழிலேயே நடத்த வேண்டும்.
பாவலர் நெறி
சென்னை பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் பணிக்கான தேர்வுகளிலும் வட இந்தியரை வெற்றி பெறச் செய்வதற்காக முறைகேடுகள் செய்யப்படுகின்றன. இது நம்முடைய இடத்தை வட இந்தியர்கள் ஆக்கிரமித்து வருகிறார்கள் என்பதை உறுதியாக்குகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்' நெறியைக் கையாளும் தமிழர்கள், ‘அவனவன் ஊரில் அவனவன் வாழ்க!' எனும் புரட்சிப் பாவலரின் நெறியையும் கையிலெடுக்க நேரிடும்!