8 வழிச்சாலை வழக்கில் தமிழக அரசு அந்தர்பல்டி அடித்துள்ளது... வேல்முருகன் சாடல்
சென்னை: 8-வழிச்சாலை வழக்கை ஆன்லைனில் நடத்துமாறு தமிழக அரசு மனு செய்துள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"நீதிக்குத் தலைவணங்கு" என அதிமுக நிறுவனர் மறைந்த எம்.ஜி.ஆர். தனது திரைப்படம் மூலம் கூறியும் அதை கேட்காதவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
10-ம் வகுப்பு தேர்வை ஜூன் 15-ல் நடத்த அனுமதி இல்லை- அரசு முடிவை பகல் 2.30 மணிக்குள் தர ஹைகோர்ட் கெடு
தொடர்போராட்டம்
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை வழியாகக் காஞ்சிபுரம் வரை 277.3 கிலோமீட்டர் 8-வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்காக, 1,900 ஹெக்டேர் நிலத்தை எடப்பாடி பழனிசாமி அரசு கையகப்படுத்தியது. இந்த நிலம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் விளைநிலமாகும். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் இதை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்; உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நடத்தினர்.
2019-ல் தீர்ப்பு
இந்த வழக்கில் 2019 ஏப்ரலில் தீர்ப்பளிக்கப்பட்டது. விவசாயிகளிடம் கருத்துக் கேட்காமல், காவல்துறையினர் உதவியுடன் நிலத்தைக் கையகப்படுத்தியது தவறு என்றும், 8-வழிச்சாலை தொடர்பான அரசாணையை உடனடியாக ரத்து செய்து, கையகப்படுத்திய நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம்.
ஆன்லைனில் வழக்கு
இப்படி மாநிலத்தின் உயர் நீதிமன்றமே தீர்ப்பளித்தும், "நீதிக்குத் தலைவணங்கு" என்று அதிமுக நிறுவனர் திரைப்படமே நடித்துச் சொல்லியதையும் கேட்காதவர்தான் எடப்பாடி பழனிசாமி. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, நெடுஞ்சாலை ஆணையத்தை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வைத்து தனது அதிமுக அரசையும் அதில் இணைத்துக் கொண்டார். கொரோனாவால் மூன்று மாதங்களுக்குப் பின் ஆன்லைனில் நீதிமன்ற விசாரணைகள் நடப்பதால், எடப்பாடியும் 8-வழிச்சாலை வழக்கை ஆன்லைனில் நடத்தக் கோரியுள்ளார்.
கருப்புக்கொடி
உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்குறுதியே அளித்த எடப்பாடி, வாக்குமாறியாக நடந்துகொள்வதை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. முதலமைச்சரின் இந்த அந்தர்பல்டி முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.