தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி என்பது கருணாநிதியின் கனவு.. திமுக அரசு அதை நிறைவேற்ற வேண்டும் -வேல்முருகன்
சென்னை: தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி வேண்டும் என்பது கருணாநிதியின் கனவாக இருந்ததாகவும் அதனை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.
மேலும், நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்து, அத்தினத்தை கொண்டாட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
முதல்வரின் தன்னிச்சையான போனஸ் அறிவிப்பு.. பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.. தொழிற்சங்க நிர்வாகிகள்
கருணாநிதி
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பா் 1-ஆம் தேதியை, கா்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள் அவா்களுக்கான தனிக் கொடியை ஏற்றி கொண்டாடி வருகிறாா்கள். ஆனால், கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களை போன்று, தமிழ்நாட்டிற்கு என தனிக்கொடி உருவாக்கப்படவில்லை. 1970-களில் தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி வேண்டும் என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் கோரிக்கை விடுத்தவர் கலைஞர்.
61 ஆண்டுகள்
அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலை காரணமாக ஒன்றிய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியவில்லை. இந்த நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 61 ஆண்டுகளை கடக்கும் நிலையில், கலைஞர் அவர்களின் தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி என்ற கனவை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
ஒன்றிய அரசு
இந்தியா என்பது ஒரு நாடு அல்ல, இது பல நாடுகள் சேர்ந்த ஒன்றியம். இதன் காரணமாக தான், அரசு அமைப்புச் சட்டம் யூனியன் ஆஃப் இந்தியா என்று குறிப்பிடுகின்றது. அதன் அடிப்படையில் தான், திராவிட முன்னேற்றக் கழகம் பதவியேற்றதில் இருந்து, இந்திய அரசை ஒன்றிய அரசு என நாம் கூறி வருகிறோம்.
காலூன்ற முயற்சி
அதே இந்திய அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு தான், தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. சாதியாலும், மதங்களாலும் மக்களை பிரித்து தமிழ்நாட்டிற்குள் எப்படியாவது காலுன்றி விடலாம் என பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்-சும் நினைத்து வரும் நிலையில், தமிழ்நாட்டிற்குள் தனிக்கொடி உருவாக்கப்படுவதன் வாயிலாக தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்க முடியும்.
தவறு இல்லை
தமிழ்நாட்டுக்கு என தனிக்கொடி அமைப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதைத் தடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு கிடையாது. எனவே, நவம்பர் 1ம் தேதியை, தமிழ்நாடு தினமாக அறிவித்து, அத்தினத்தை கொண்டாடப்பட வேண்டும். இதற்காக, அரசியல் கட்சிகளையும், அரசியல் இயக்கங்களையும் அழைத்து ஆலோசனை நடத்துவதோடு, தனிக்கொடியை உருவாக்குவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.