தமிழகத்தில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை இல்லை... போராட்டத்தில் குதித்த வேல்முருகன்
சென்னை: தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற வேல்முருகன், தமிழக வேலை தமிழருக்கே என்ற முழக்கத்தை முன் வைத்தார்.
தமிழகத்தில் இந்திக்காரர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர் மண்ணின் மைந்தர்களான தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
புதிய கல்வி கொள்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினரின் பதாகை ஏந்தும் போராட்டம்
வேல்முருகன் போராட்டம்
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலஅரசு மற்று மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை தர வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் தமிழர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டன.
வேல்முருகன் பேச்சு
சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமையேற்ற வேல்முருகன், பாங்க் ஆஃப் இந்தியா தமிழக கிளைக்களுக்காக தேர்வு செய்யப்பட்ட எட்டாயிரம் பேர்களில் ஏழாயிரம் பேர் வட இந்தியர்கள் என்றும் இப்படியிருந்தால் வங்கிகளுக்கு செல்லும் படிப்பறிவில்லாத மக்கள் நிலை என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பினார். இது திட்டமிட்டு நிகழ்த்தப்படும் நிகழ்வு என குற்றஞ்சாட்டினார்.
கண்டுகொள்ளவில்லை
தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு வட இந்தியர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு ஏற்கனவே தாம் கொண்டு சென்றுவிட்டதாகவும், ஆனால் அவர் எதைப்பற்றியும் கண்டுகொள்ளவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.
நெய்வேலி சுரங்கம்
தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே பணியிடங்கள் உட்பட எங்கு பார்த்தாலும் வட மாநிலத்தவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவதாகவும் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணும் வரை தாங்கள் ஓயப்போவதில்லை எனவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.