டோல்கேட் மூலம் பகல் கொள்ளை... சுங்கச்சாவடிகளை மூடவேண்டும்.... வேல்முருகன் போர்க்கொடி..!
சென்னை: தமிழகத்தில் டோல்கேட்கள் மூலம் பகல் கொள்ளை நடைபெறுவதாகவும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் பெட்ரோல்-டீசல் விலையும் ஏறுகிறது; சுங்கக் கட்டணமும் ஏறுகிறது என்றால் சாதாரண வாகன ஓட்டியின் கதி என்ன? என அவர் வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கையில்;
"இந்தியை நீக்குங்க.. நீக்க முடியலன்னா 22 மொழிகளையும் சேருங்க".. பெங்களூர் மெட்ரோவுக்கு அதிரடி ஆர்டர்
தமிழகத்திற்கு துரோகம்
நாடு முழுவதும் சுமார் 465 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் தமிழகத்தில்தான் மிக அதிகமாக 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. காரணம், நெடுஞ்சாலைகளின் தூரம் குறைவு என்கிறார்கள். கிலோமீட்டர் அளவைப் பொறுத்துதானே சுங்கச்சாவடி அமைத்திட விதிமுறை சொல்கிறது. அப்படியிருக்க, குறைந்த தூரத்திற்குள் சுங்கச்சாவடிகளை அமைத்தது தமிழகத்தின் மேலுள்ள துவேஷமும் தழகத்திற்குச் செய்யும் துரோகமுமே ஆகும்.
பாஜக அரசு
காலக்கெடு முடிந்த சுங்கச்சாவடிகளை மூடச் சொல்கிறது விதிமுறை. ஆனால் இதற்கு நேர்மாறாக அவற்றை நிரந்தரமாக்கியிருக்கிறார்கள். கட்டணம் வசூலிக்க ஃபாஸ்டேக் (FASTag) மின்னணு முறையைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இது சுங்கச்சாவடிகளை நீடிக்கும் உள்நோக்கம் அன்றி வேறென்ன? சுங்கக் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது என்று சொல்லி அடிக்கடி ஏற்றவும் செய்கிறது ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசு.
கைகலப்பு
ஆனால் குறிப்பிட்ட அந்தக் கட்டணத்தை வசூலிக்காமல் ஒரு மடங்கு, இரு மடங்கு கூடுதலாகவே வசூலிக்கின்றன சுங்கச்சாவடிகள். கடந்த 2019 செப்டம்பர் மாதம், 4% முதல் 10% வரை ஏற்றி சுங்கக் கட்டணத்தை மாற்றியமைத்தது மோடி அரசு. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே அங்கங்கு வாக்குவாதம், கைகலப்பு கூட ஏற்பட்டது.
கூடுதல் கட்டணம்
இப்போது தமிழ்நாட்டில் நாகை - மதுரை - திருச்சி - உளுந்தூர்பேட்டை - பாடலூர் டிவிஷனில், தேசிய நெடுஞ்சாலையில் 192.750 கிலோமீட்டரில் இருக்கும் செங்குறிச்சி ஃபீ பிளாசா வரையிலான நான்கு வழிச்சாலையில் 46.947 கிலோமீட்டர் அளவுக்கு சாலை செப்பனிடப்பட்டு வலுப்படுத்தப்பட்டிருப்பதால் அதற்கான சுங்கக் கட்டணம் மாற்றி - ஏற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது; அது 01.09.2020இல் தொடங்கி, 10.08.2021 வரை அமலில் இருக்கும். அப்படியென்றால் 10.08.2021க்குப் பிறகும் புதிய கூடுதல் கட்டணம் வரும்தானே?
மாதக் கட்டணம்
கார், ஜீப். வேன் ஆகியவற்றிற்கான கட்டணம் ஒரே ஆள் போனால் 55 ரூபாய், ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்கள் போனால் 80 ரூபாய், மாதாந்தரக் கட்டணம் 1585 ரூபாய்.இலகு ரக வணிக வாகனங்களுக்கு காலியாகச் சென்றால் 95 ரூபாய், ஆட்களோ சரக்கோ ஏற்றிச் சென்றால் 140 ரூபாய், மாதாந்தரக் கட்டணம் 2775 ரூபாய். பேருந்து, ட்ரக் காலியாகச் சென்றால் 185 ரூபாய், ஆட்களோ சரக்கோ ஏற்றிச் சென்றால் 280 ரூபாய், மாதாந்தரக் கட்டணம் 5555 ரூபாய். கன ரக வாகனங்கள் காலியாகச் சென்றால் 295 ரூபாய், சரக்கு ஏற்றிச் சென்றால் 445 ரூபாய், மாதாந்தரக் கட்டணம் 8925 ரூபாய்.
வாகனப்பதிவு
வாகனத்தைப் பதிவு செய்யும்போதே ஆயுள் வரி என்று 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்தப்படுகிறது. அதன் பிறகு எப்சி என்று ஆண்டுக்கொரு முறை பணம் பிடுங்கப்படுகிறது. இதற்கு மேல் சுங்கச்சாவடிக் கட்டணம் என்னும் வழிப்பறிக் கொள்ளை! இந்தச் சுங்கச்சாவடிகளை அரசமைப்புச் சட்டத்தின் எந்தச் சட்டப் பிரிவும் வலியுறுத்தவில்லை; ஆனால் கொள்கை முடிவாக (Policy Decision) எடுத்து பெரும்பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் மேலும் கொழுக்கத் தாரைவார்த்திருக்கிறது ஆர்எஸ்எஸ்-பாஜக அரசு.
கதி என்ன?
இந்தக் கொரோனா காலத்தில் பெட்ரோல்-டீசல் விலையும் ஏறுகிறது; சுங்கக் கட்டணமும் ஏறுகிறது என்றால் சாதாரண வாகன ஓட்டியின் கதி என்ன?
மத்தியிலும் மாநிலத்திலும் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகங்கள் மக்கள் வரிப்பணத்தில்தான் இயங்குகின்றன!
அப்படியிருக்க, வழிப்பறிக்கொள்ளையே நடத்தும் சுங்கச்சாவடிகள் ஏன்? காலக்கெடு முடிந்தும் அவற்றை நிரந்தரமாக்கி, கட்டணம் ஏற்றவும் அனுமதி ஏன்?