காடுவெட்டி குரு குடும்பத்தை காக்க களம் குதிக்கும் வேல்முருகன்.. ஒரே கல்லில் 2 மாங்காய்!
காடு வெட்டி குரு குடும்பத்துக்கு முழு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வேல்முருகன் கூறியுள்ளார்.
சென்னை: காடுவெட்டி குருவின் குடும்பத்தினருக்கு பண்ருட்டி வேல்முருகன் ஆதரவு அளித்துள்ளார். இதன்மூலம் ஒரே கல்லில் ரெண்டு மாங்காயை அடித்துள்ளார் வேல்முருகன்.
பாமகவுக்கு ஒரு போட்டி என்றால், பாமகவுக்கு ஓரளவுக்கு மாற்று என்றால் அது வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிதான். டாக்டர் ராமதாஸின் தளபதியாக ஒருகாலத்தில் இருந்தவர்தான் வேல்முருகன்.
இன்னும் சொல்லப்போனால் காடுவெட்டி குருவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர். ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக பாமகவிலிருந்து பிரிந்து வெளியே வந்து கட்சியை ஆரம்பித்து, தனி ஒரு மனிதனாக ஓரளவு வளர்த்தும் வளர்ந்தும் வருகிறார்.
தனித்து போட்டியிடுவதே பொருத்தமானது, சரியானது.. வேல்முருகன் தில் முடிவு
திருமா, வேல்முருகன்
கொள்கையில் அதிக பிடிப்பு கொண்டவர். காசு பணத்துக்கு ஆசைப்படாதவர். பழைய ஆசானுக்கு எதிராகவும் வட மாவட்டங்களில் நுழைந்து செல்வாக்கை தக்க வைத்து கொள்ள போராடி வருகிறார். இப்படி வட மாவட்டங்களில் பாமகவுக்கு எதிராக களம் இறங்குபவர்களில் வேல்முருகனும், திருமாவும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல இவர்கள் இருவருக்கும் இணக்கம் நன்றாகவே இருக்கிறது. இவர்கள் இணைந்தால் இன்னும் பலம் என்றுகூட கருத்துக்கள் அடிக்கடி வந்து போகும்.
சாமர்த்தியம்
இந்த நிலையில் வேல்முருகன் தனித்து போட்டி என்று சொல்லி இருக்கிறார். கமல், சீமான், தினகரன் எல்லாம் தனித்து போட்டியிடும்போது நாம் போட்டியிடக்கூடாதா என்று துணிந்து இறங்கி உள்ளார். இதில் ஒரு சாமர்த்தியம் என்னவென்றால், பாமகவில் குரு குடும்பத்துக்கு ராமதாஸ் எதுவும் செய்யவில்லை என்ற புகைச்சல் பெரிதாக எழுந்து வருகிறது. இதனை வேல்முருகன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார்.
பாதுகாப்பு
நேற்று முன்தினம் வேல்முருகன் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோது, "மறைந்த காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் அளித்த பேட்டி காரணமாக அந்த குடும்பத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு எது வேண்டுமானாலும் நடக்கும் என்ற நிலை இருக்கின்றது. அவர்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது, தமிழக வாழ்வுரிமை கட்சியின் கடமை ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.
2 மாங்காய்
குரு மறைந்தாலும் இன்னமும் அவருக்கு வன்னியர்களின் ஆதரவு பெருகி கிடக்கிறது. ராமதாஸ் மேலுள்ள ஆத்திரம் அத்தனையும் இப்போது வேல்முருகனுக்கு சாதமாக குரு ஆதரவாளர்கள் காட்ட முனைவார்கள். இதனால் பாமகவுக்கு ஒரு பக்கம் மிகப்பெரிய சரிவு இல்லாவிட்டாலும் நிச்சயம் வேல்முருகன் ஓட்டை பிரிப்பார் என்றே நம்பப்படுகிறது. ஆக ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கக் காத்திருக்கிறார் வேல்முருகன்.