மழை பெய்ய வைத்து "அருணாசலத்தை" விழாவுக்கு அனுப்பி வைத்த ஆண்டவன்.. ரஜினியை நெகிழ வைத்த வெங்கையா!
சென்னை: மழை பெய்ய வைத்து ரஜினிகாந்தை விழாவுக்கு ஆண்டவன் அனுப்பி வைத்ததாக வெங்கையா நாயுடு கூறியதை கண்டு ரஜினிகாந்த் நெகிழ்ச்சி அடைந்தார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய "கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்" என்ற புத்தகம் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த இரண்டு வருடங்களாக செய்த பணிகள் குறித்த ஆவண புத்தகமாக இது வெளியாக இருக்கிறது.
சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பிரகாஷ் ஜாவடேகர், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நினைப்பதாக கருத்து
இந்த விழாவில் வெங்கையா நாயுடு ஏற்புரை வழங்கினார். அவர் கூறுகையில் இந்த நிகழ்ச்சியில் வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ரஜினிகாந்தை அழைத்தோம். அப்போது தனக்கு படப்பிடிப்பு இருக்கும் என நினைப்பதாக தெரிவித்தார்.
வெங்கையா
ஆனால் அவரிடம் கடவுள் சொல்லிவிட்டார். நீங்கள் சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளுங்கள். நான் மழையாக பெய்ய போகிறேன் என கூறிவிட்டார். அதனால்தான் ரஜினி இங்கு வந்துள்ளார் என வெங்கையா கூறியவுடன் அவையில் சிரிப்பலை எழுந்தது.
மும்பையில்
ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படம் வரும் 2020-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதற்காக ரஜினி மும்பையில் இருந்தார்.
புத்தக வெளியீட்டு விழா
ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து விட்டதால் மகாராஷ்டிரத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் படப்பிடிப்பு ரத்தானதை அடுத்து ரஜினி, புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.